Budget 2026: வரிச் சலுகைகள் குறைய வாய்ப்பு? வரையறுக்கப்பட்ட வரி நிவாரணம்.. பட்ஜெட் 2026-27..எப்படி இருக்கும்?
Budget 2026: மத்திய பட்ஜெட் 2026-27 பெரிய அளவிலான வரிச் சலுகைகளுக்குப் பதிலாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2026-27 நாளை பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த முறை பெரிய அளவிலான வரிச் சலுகைகளுக்குப் பதிலாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரி வரம்புகள் (Tax Slabs) மாற்றி அமைக்கப்பட்டதாலும், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், இந்த முறை கூடுதல் சலுகைகளுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக பி.எல் கேபிடல் (PL Capital) நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பங்குச்சந்தையில் நிலவும் மந்தநிலை
உலகளாவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக வரி (Tariff) தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளால், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில மாதங்களில் ஈட்டிய லாபத்தை இழந்துள்ளன. குறிப்பாக, நிஃப்டி (Nifty) பெரிய மாற்றமின்றி அதே நிலையிலேயே நீடிக்கிறது. புவிசார் அரசியல் மாற்றங்கள் உலகளாவிய வணிக சமன்பாடுகளை மாற்றி வருவது சந்தையில் ஒரு தயக்க நிலையை உருவாக்கியுள்ளது.
ஆறுதல் தரும் உள்நாட்டு நிலவரம்:
சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரக் காரணிகள் வலுவாக இருப்பதாக 'இந்தியா ஸ்டேட்டஜி ரிப்போர்ட்' குறிப்பிடுகிறது. வட்டி விகிதக் குறைப்பு, ஜிஎஸ்டி சீரமைப்பு, வருமான வரி குறைப்பு மற்றும் குறைந்த அளவிலான பணவீக்கம் போன்றவை நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மூன்றாம் காலாண்டில் உள்நாட்டுத் தேவை மற்றும் பொருளாதாரக் குறிகாட்டிகள் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள்:
இது குறித்து பி.எல் கேபிடல் நிறுவனத்தின் நிறுவன ரீதியிலான பங்குச் சந்தை பிரிவின் இணைத் தலைவர் அம்னிஷ் அகர்வால் கூறுகையில், "வருமான வரி குறைப்பு, ரெப்போ வட்டி விகிதத்தில் மொத்தம் 125 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது, இயல்பான பருவமழை மற்றும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிலான குறைந்த பணவீக்கம் போன்ற காரணிகளால் இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டும் வலுவான வளர்ச்சியைக் காணும்" எனத் தெரிவித்தார்.
நிஃப்டியின் ஒரு பங்கிற்கான ஆதாயம் (EPS), 2026-28 நிதியாண்டுகளில் 14.8 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் (CAGR) கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கான நிஃப்டி இலக்கு 28,814 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எந்தத் துறைகளில் முதலீடு செய்யலாம்? அண்மைக்கால சூழலில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் (Large Caps) சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக:
-
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFCs)
-
வாகன உற்பத்தி (Autos)
-
நகையணிகள் மற்றும் பாதுகாப்புத் துறை (Defence)
-
உலோகங்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள்
ஆகிய துறைகள் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கலாம் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. மேலும், நவம்பர் மாதம் முதல் நுகர்வோர் பொருட்களுக்கான தேவை மெல்ல அதிகரித்து வருவதாகவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தேவை சீராக வளர்ந்து வருவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























