Ola Electric Bike: ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் தயார்..! எப்போது சந்தைக்கும் வரும் தெரியுமா? சிஇஒ அறிவிப்பு
Ola Electric Bike: இந்திய சந்தையில் ஓலா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக், எப்போது சந்தைக்கும் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Ola Electric Bike: இந்திய சந்தையில் ஓலா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்கான பேட்டரிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் பைக்:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், தங்களது முதல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் பல்வேறு தகவல்க்ளை பகிர்ந்துகொண்டார்.
ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?
ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள், சந்தைப்படுத்தப்படும் என்று பவிஷ் அகர்வால் தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ள ஓலா நிறுவன பிரத்யேக நிகழ்வின் போது, புதிய எலெக்ட்ரிக் பைக் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனவும் கூறினார். மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஓலா எலக்ட்ரிக் பைக்குகளுடன் மின்சார கார்களையும் நோக்கியும் அந்த நிறுவனம் நகர்ந்து வருகிறது. ஆனால், தற்போதைய சூழலில் இந்திய சந்தையில் ஓலாவின் எஸ்1 ப்ரோ, எஸ்1 ஏர் மற்றும் எஸ்1எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டிலேயே தயாராகும் EV பேட்டரிகள்:
ஓலா நிறுவனம் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்காக, உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இ-மோட்டார் பைக்குகளில் மிகப்பெரிய பேட்டரியைக் காணலாம் என்று நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது. அதேநேரம், Ola Electric இன் முன்னுரிமை இப்போது மின்சார கார்களில் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஓலாவின் மின்சார கார்?
மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஓலா, மின்சார காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்நிறுவனம் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் 2022 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த கண்ணாடி கூரை கார் தயாராகிவிடும் என்பது இலக்காக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ள இருக்கும் ஐபிஓ காரணமாக நிறுவனம் கார் உற்பத்தி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது நிறுவனம் தனது மின்சார இரு சக்கர வாகனங்களின் சந்தையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























