”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
தவெகவை சேர்ந்த அஜிதா நாள் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் அதனை கண்டுகொள்ளாமல் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக வேறு ஒருவரை நியமித்து அதிரடி காட்டியுள்ளார் விஜய். நேற்று முழுவதும் பரபரப்பை கிளப்பிய அஜிதா தற்போது அந்தர்பல்டி அடித்து இறங்கி வந்துள்ளார்.
தவெகவில் சில பகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு அஜிதா நியமிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வேறு ஒருவரின் பெயர் அடிபட்டதால் ஆத்திரமடைந்தவர்கள் நேரடியாக சென்னை வந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
தவெக தலைவர் விஜய்யை சந்திக்க முயன்ற அஜிதாவை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். கட்சி அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு விஜய் திரும்பியபோது, அவரது காரை அஜிதா மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அலுவலக வாசலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அஜிதாவுடன் சிடிஆர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தும் எடுபடவில்லை. யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை உரிய நேரத்தில் விஜய் அறிவிப்பார் என நிர்மல்குமார் தெரிவித்தார்.
இதற்கு விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்தநிலையில் அஜிதாவை கண்டுகொள்ளாமல் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்து அறிவித்துள்ளார் விஜய். காலையில் இருந்து ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் குதித்த அஜிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அஜிதாவுக்கு எதிராக தவெகவை சேர்ந்த பெண்களே கொந்தளிக்க ஆரம்பித்தனர். கட்சியினரே சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். விஜய்யும் எதுவும் கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டிவிட்டதால் அஜிதா தற்போது அந்தர்பல்டி அடித்து இறங்கி வந்துள்ளார். நேற்று பரபரப்பை கிளப்பிய நிலையில் இன்று காலையே தவெகவுக்கு ஆதரவாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் இறுதி மூச்சு உள்ள வரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும், எம் தலைவர் தளபதி விஜய் அவர்களோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார்.





















