Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க" நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கண்டனம்!
``எனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் என் பெயரை இழுக்காதீங்க" என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கண்டனம். விஜய்யுடன் தன்னை இணைத்து நயினார் நாகேந்திரன் பேசியிருந்த நிலையில் த்ரிஷா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில், ``விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து அவர் வெளிய வர வேண்டும்" என்று கூறியிருந்தார். நயினார் நாகேந்திரனின் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் வெளிவந்தன. குறிப்பாக, நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்களும் வந்தன. அப்போதும் கூட, ``என்னை பொறுத்த அளவில் யாருடைய மனதும் தனிப்பட்ட முறையில் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான்" என்று நயினார் நாகேந்திரன் கடந்து சென்றார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார். த்ரிஷா தரப்பில் வெளியான வழக்கறிஞர் அறிக்கையில், "மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருபவரிடமிருந்து இப்படியொரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. த்ரிஷாவுக்கு எந்தக் கட்சியோடும் தொடர்பு இல்லை. ஆவர் அதை விரும்பவுமில்லை. அரசியலில் எப்போதும் அவர் நடுநிலையாகவே இருந்திருக்கிறார். தான் ஒரு திரைக்கலைஞராகவே அவர் அறியப்பட விரும்புகிறார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதப்பொருளாக மாற்றக்கூடாது. உயர் பதவியில் இருப்பவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். எனவே, அவருக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் அவரின் பெயரை இழுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.























