Sheikh Hasina : தப்பிய வங்கதேச பிரதமர்! சாம்ராஜ்யம் சரிந்த கதையார் இந்த ஷேக் ஹசீனா?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். எந்த ஓர் அரசாக, எவ்வளவு அதிகாரத்தின் உச்சியில் இருந்தாலும், மக்கள்தான் நாட்டின் முதல் நாயகர்கள் என்பதை மறந்தால் என்ன ஆகும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக மாறி இருக்கிறது. யார் இந்த ஷேக் ஹசீனா? நடந்தது என்ன? என்பதை காணலாம்
ஆகஸ்ட் 15, 1975 இல், ஷேக் ஹசீனாவின் தந்தையும், வங்கதேச தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான், புதிய அதிபராக பதவியேற்ற சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருடன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வங்கதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டை அரசியல் கொந்தளிப்பு மற்றும் ராணுவ ஆட்சிக்குள் தள்ளியது.
இதையடுத்து,பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய நாடான இந்தியாவில் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழியின்றி, ஜெர்மனியில் இருந்த ஷேக் ஹசீனா இந்தியா வந்தடைந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஹசீனாவுக்கு உதவிக் கரம் நீட்டி பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் அளித்தார். அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் கடுமையான பாதுகாப்பில் வாழ்ந்தனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரும் எதிர்ப்புகள் மற்றும் வன்முறைக்கு மத்தியில் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதன்படி, டெல்லியில் தஞ்சமடைந்துள்ள அவர், சிறிது நாட்கள் இங்கேயே தங்கியியிருந்து பிறகு இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது என்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே அவர் இந்தியாவில் 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்துள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மே 17, 1981 அன்று, ஹசீனா தனது தாயகமான வங்கதேசத்திற்கு திரும்பினார். அங்கு அவர் அவாமி லீக்கின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, அவர் நாடு திரும்பியது என்பது, ராணுவ ஆட்சிக்கு எதிரான நீண்ட மற்றும் கடினமான ஹசீனாவின் போரின் தொடக்கமாக அமைந்தது. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் உட்பட பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், ஹசீனா விடாமுயற்சியுடன் போராடி, 1996ம் ஆண்டு முதன்முறையாக வங்கதேசத்தின் பிரதமரானார். அதைதொடர்ந்து, ஒருநாட்டிற்கு நீண்டகாலமாக பிரதமராக இருந்த பெண் என்ற பெருமையை பெறும் அளவிற்கு பெருஞ்சாதனைகள் படைத்தார். ஆனால், மீண்டும் வெடித்த ஒரு கலவரம் காரணமாக, ஷேக் ஹசீனா இரண்டாவது முறையாக இந்தியாவில் தஞ்சம்டைந்துள்ளார்.
இதற்குப் பின்னணி வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை சம்பவங்களாள் நாட்டில் கிளர்ந்து எழுந்த வன்முறையால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 98 பேர் உட்பட, மொத்தம் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தி வந்தனர். இதனால் சுமார் 20 ஆண்டுகாலம் பிரதமராகவும் தொடர்ந்து 4ஆவது முறையாகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த ஷேக் ஹசீனா தனது வங்கதேசப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டைவிட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.





















