Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
மேயர் பிரியா வரும் தேர்தலில் திருவிக நகர் தொகுதியில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேயர் பிரியாவை வைத்து அதிமுகவுக்கு எதிராக திமுக தலைமை மாஸ்டர் ப்ளான் ஒன்றை போட்டிருப்பதாக சொல்கின்றனர்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவிக நகர் 74 வது வார்டில் போட்டியிட்டு 6,299 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பிரியா ராஜன். இதன்மூலம் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகவும், முதல் தலித் பெண் மேயராகவும் பதவியேற்றார். விரையில் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் கவுன்சிலர்கள் பலர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மேயர் பதவியில் இருந்து MLA ஆகும் ஆசையில் பிரியா இருப்பதாக சொல்கின்றனர். அதற்கான வேலைகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் திமுக தலைமைக்கும் தனது விருப்பத்தை சொல்லிவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. மேயராக அதிகம் கவனிக்கப்பட்டவராக வலம் வந்த பிரியாவுக்கு மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இருப்பதால் அவரை தேர்தலில் களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக சொல்கின்றனர்.
அதன்படி திருவிக நகர் தொகுதியையே மேயர் பிரியா குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக இருக்கிறது. 2011 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த நீலகண்டன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016 மற்றும் 2021 என 2 தேர்தல்களிலும் திமுகவை சேர்ந்த தாயகம் கவி வெற்றி பெற்றார். இந்த தொகுதியை தான் மேயர் பிரியாவும் கேட்பதாக சொல்கின்றனர்.
மற்றொரு பக்கம் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் திருவிக நகர் தொகுதியையே கேட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதனால் அவருக்கு எதிராக மேயர் பிரியாவை களமிறக்கி திருவிக நகர் தொகுதியை தக்கவைக்க திமுக தலைமை ப்ளான் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின் முதலமைச்சராகவும், அதேபோல் சென்னை மேயராக இருந்த மா.சுப்ரமணியன் அமைச்சராகவும் உள்ள நிலையில் அந்த வரிசையில் மேயர் பிரியாவும் தேர்தல் அரசியலுக்கு வர ரெடியாகிவிட்டதாக சொல்கின்றனர். மேயர் பிரியாவுக்கு சீட் கிடைக்குமா, மேயர் பதவியில் இருந்து MLA ஆக சட்டப்பேரவை செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.























