RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து மத்திய உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யார் இந்த பிரகலாத் ஜோஷி இவரது பின்னணி என்ன அரசியல் வரலாறு என்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்களின் தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி புதிய மத்திய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்!.
1962-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார் பிரகலாத் ஜோஷி. ஹுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், 1983-ஆம் ஆண்டு தார்வாடில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கடசித்தேஷ்வர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (B.A.) பெற்றார்.
பொறியியல், சட்டம் அல்லது மேலாண்மை போன்ற தொழில்முறைப் பட்டங்களைப் பெற்ற பல தலைவர்களைப் போலல்லாமல், ஜோஷியின் கல்விப் பின்னணி மானுடவியலில் (Humanities) அமைந்துள்ளது. மாணவர் பருவத்திலேயே சமூக சேவை, பொதுப் பிரச்சினைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவர், ஆரம்பகாலத்தில் தொழில்முனைவு மற்றும் சமூக முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டு வந்தார். இளமைப் பருவத்திலேயே ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துடன் (RSS) இணைந்தார். பின்னர் பாஜக-வின் தீவிர அரசியல் களத்திற்குள் நுழைந்தார். இவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில், 2004-ஆம் ஆண்டு தார்வாட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
அன்று முதல் நடந்த ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, தார்வாட் தொகுதியைத் தன் வசம் வைத்துள்ளார். தொடர்ந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கர்நாடகாவில் பாஜகவின் மிக முக்கியமான மற்றும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக உருவெடுத்தார். அரசியல் ஒருங்கிணைப்பும், கொள்கைச் செயலாக்கமும் தேவைப்படும் சவாலான துறைகளைக் கையாள்வதில் ஜோஷி திறம்படச் செயல்பட்டுள்ளார். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை என அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சகங்களை வெற்றிகரமாக நிர்வகித்த நம்பிக்கைக்குரிய நிர்வாகியாக இவர் திகழ்கிறார்.
சாதாரண அமைச்சரவை மாற்றமாக இல்லாமல், நீட் விவகாரம் தொடர்பான நாடு தழுவிய பெரும் போராட்டத்தின் விளைவாகவே தர்மேந்திர பிரதான் விலகி, அந்தப் பொறுப்பிற்கு பிரகலாத் ஜோஷி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியக் கல்வி முறையை சீரமைப்பதிலும், மாணவர்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதிலும் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்
ட்ரெண்டிங் செய்திகள்






















