Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா
4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதல்வராக கூடாது என உதயநிதியை தாக்கி பேசியுள்ளார் விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா.
உதயநிதி ஸ்டாலினை விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. திமுகவினர் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதற்கு ஆர்வமாக இருந்தாலும், அமைச்சர் துரைமுருகன் இதில் பிடிப்பில்லாமல் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. துணை முதல்வர் பதவியை தாண்டி திமுகவில் பரபரப்பாக பேசப்படும் மற்றொன்று விசிக விவகாரம்.
மது ஒழிப்பில் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது திமுக கூட்டணியில் குழப்பமா என்று பேசப்பட்டது. இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இன்னும் அணையாமல் இருக்கும் ஒரு பிரச்னை “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு” என்று விசிகவில் எழுந்து வரும் குரல். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு டெலிட் செய்தது விமர்சிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விசிகவினர் தொடர்ந்து இதுதொடர்பாக பேசி வருகின்றனர்.
இந்தநிலையில் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்ன விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில், ‘4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்குவதில் தவறில்லையே. இப்படி விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் போது அவர்களையே நம்பி இருக்கும் சமூகங்கள் முழுமையாக பயனடையும், அதனால் விசிகவை அதிகாரத்திலும் பங்கெடுக்க வைப்பதுதான் எனது நோக்கம்” என்று கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போவதாக பேசப்படும் நேரத்தில், உதயநிதியை டார்கெட் வைத்து ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பதால் திமுகவினர் கடுப்பில் இருக்கின்றனர். அதனால் துணை முதல்வர் விவகாரத்தை வைத்து கூட்டணிக்குள் மீண்டும் சிக்கல் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பின்னால் அரசியல் வியூக வகுப்பாளரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின் மாஸ்டர் ப்ளான் இருப்பதாக தகவல் வெளியாயிருந்தது. திமுக கூட்டணியில் விசிகவை முக்கிய கட்சியாக மாற்றுவதற்கு ஆதவ் அர்ஜூனா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















