"கீழ்தளத்தில் ராஜினாமா மேல்தளத்தில் இணைப்பு" விஜய்யை வெளுத்த EPS
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை அறிமுகப்படுத்திய தவெக கண்டனம் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி வேலுமணி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேரில் 3 பேர் இன்று தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த 3 பேரும் அங்கேயே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரிலும் சந்தித்து தவெக-வில் இணைந்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் எக்ஸ் தளத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
அந்தப் பதிவில், "சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், தான் அமைத்த பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி, தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வருணித்து களமாடினாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒருசில கட்சிகளை தேடிப்போய் ஆதரவு கேட்டதும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்களை சோஃபாவோடு போய் 'புஷ்பா' பட பாணியில் ஆதரவு பெற்றதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுக மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வெற்றிபெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள த.வெ.க. அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில், கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை, குதிரை பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
தற்போதைய த.வெ.க. அரசின் இதுபோன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும்.
இந்த அரசிற்கு முட்டு கொடுக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், தற்போது ராஜினாமா செய்துள்ளவர்களாக இருந்தாலும், திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
‘ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்பதுபோல, ‘பழைய மந்தையில் புதிய கள்' என்பதுபோல, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" இபிஎஸ் விமர்சித்திருக்கிறார்
ட்ரெண்டிங் செய்திகள்






















