DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்
இரட்டை இலக்கத்தில் சீட் கேட்டு இன்னும் கூட்டணி டீலை முடிக்காமல் அடம்பிடித்துக் கொண்டிருக்கும் தேமுதிகவில் விருப்ப மனு வாங்க கூட ஆள் இல்லாமல் அந்த இடமே வெறிச்சோடி காணப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க என கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் விருப்பமனுக்களைப் பெற்றுவருகின்றன. இதற்கு மத்தியில், தேமுதிக இன்னும் எந்தக் கூட்டணியில் இணையப்போகிறோம் என்பதையே முடிவுசெய்யாமல் இருக்கிறது. நீங்கள் விரும்பும் கூட்டணியில் தான் இணைவோம், பொறுமையாக காத்திருங்கள் என பிரேமலதாவும் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார்.
திமுக, அதிமுக என இரு கூட்டணி தரப்பிலும் தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. `கூட்டணிக்கு வரவேண்டுமெனில் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும்' என்ற நிபந்தனையை தேமுதிக முன்வைத்து வருவதால் டீல் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்று அளிக்கலாம் என்று கடந்த வாரம் அறிவித்தார்.
இதில், தமிழகத்தில் பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோல், புதுச்சேரி பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாருமே அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஒருத்தர் கூட வராமல் தேமுதிக அலுவலகமே வெறிச்சோடி காணப்படுகிறது.
அதிகமான சீட் கேட்கும் தேமுதிகவில், தொகுதிகள் கேட்டு விருப்ப மனு அளிக்க கூட ஆள் இல்லாதது தேமுதிகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.






















