ஆஹா கிடைச்சிடுச்சு... தாலாட்டும் காற்றும், சளசளவென்று பாயும் தண்ணீரும்! விடுமுறையை ரம்யமாக்கும் தென்பெரம்பூர் அணைக்கட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு. சிலர் அறிந்தாலும் பலராலும் இன்னும் அறியப்படாமல் உள்ள அருமையான சுற்றுலாத்தலம்தான் இது.

தஞ்சாவூர்: இடமும் ரம்மியம், மனதும் குதூகலம் அடையும். வாரம், மாதம் என்று வேலை, வேலை என்று ஓடிய ஓட்டத்திற்கு ஓய்வு கொடுத்து மனசை ரிலாக்ஸ் படுத்திக் கொள்ள ஒரு சிறந்த இடம் இருக்கிறது.
இயந்திர கதியில் கடிகார முள்ளை விட முன்னே செல்லும் காலமாக மாறிவிட்டது. இந்த இயந்திர வாழ்க்கையில் சற்றே ரிலாக்ஸ் ஆக ஒரு சுகமான, ரம்மியமான இடம் இருக்கிறது. ஜில்லென்ற காற்றும், சளசளவென்று பாய்ந்தோடும் தண்ணீரும் மனதை குளிர வைத்து விடும். அந்த இடம் தஞ்சை மாவட்டம் தென்பெரம்பூர் அணைக்கட்டு தான்.
கவலைகள் மறந்து, மனசு, உடம்பு புத்துணர்ச்சி பெற்று நம்மை நாமே ரீசார்ஜ் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. அத்தகைய சுற்றுலாத் தலமாக உள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு. சிலர் அறிந்தாலும் பலராலும் இன்னும் அறியப்படாமல் உள்ள அருமையான சுற்றுலாத்தலம்தான் இது.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே அமைந்துள்ளது தென்பெரம்பூர் அணைக்கட்டு. கல்லணைத் தலைப்பிலிருந்து வெளியேறுகிறது காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு. சுழன்றும், தவழ்ந்தும், வேகமாகவும் இருகரைகளையும் தொட்டு தாலாட்டி, முட்டி மோதி கண்களை கொள்ளைக் கொள்ளும் அழகுடன் வெண்ணாறு வந்து சேர்ந்து நிற்கும் இடமே தென்பெரம்பூர்.
கடல் போல் காட்சியளிக்கும் தென்பெரம்பூர் அணைக்கட்டு கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்தும் ஷட்டர்ஸ் வழியாக வெளியேறும் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்றும் பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது. இங்கிருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என மூன்று ஆறுகளாகப் பிரிந்து செல்கிறது. மேலும் ஜம்புக் காவேரி வாய்க்கால், ராஜேந்திரன் வாய்க்கால் என்றும் பிரிந்து செல்கிறது.
இந்த அணைக்கட்டுக்கு அருகிலேயே இருபுறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டில் காளையை அடக்கும் வீரரின் சிலை, சுற்றுச் சுவரில் தேசியத்தலைவர்கள் படங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்த்தியாக வளர்ந்து வெயிலை தரைக்கு அனுப்பாமல் உயர்ந்து நிற்கும் மரங்களுக்கு நடுவே உள்ள பூங்கா மனசை ரிலாக்ஸ் படுத்தும். ஓடும் தண்ணீரில் மோதி நம்மீது வீசும் காற்றும் ஜில்லென்று மனதையும் குளிர வைக்கும். ஊட்டிக்குள் புகுந்த உணர்வை ஏற்படுத்தும். மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவில் உட்கார்வதற்காக சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள மண் திட்டில் விண்ணை நோக்கி வளர்ந்துள்ள இந்த மரங்கள் காற்றின் வேகத்தில் குளுகுளுவென்று இயற்கை காற்றை அள்ளி வழங்கி நம்மை தாலாட்டும். வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசன வாய்க்கால் தன் பயணத்தை தொடங்குகிறது. குறைந்த அளவில் தண்ணீர் செல்லக் கூடிய இதில் அச்சமின்றி எவ்வித ஆபத்தும் இல்லாமல் குளித்து மகிழலாம். மெயின் ஆறுகளில் ஆழமும், முதலை ஆபத்தும் இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு மேல் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லமுடியும். அதுவும் எதிரில் வாகனம் வரமுடியாது. வார இறுதிநாட்களில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மனமார சாப்பாட்டை கட்டி வந்து குடும்பத்தோடு சுற்றி பார்த்து செல்கின்றனர்.
திருச்சியிலிருந்து கல்லணை - திருக்காட்டுப்பள்ளி வழியாக பூதலூர் வந்து தென்பெரம்பூரை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் வழியில் தென்பெரம்பூருக்கு வரலாம். சொந்த வாகனங்களில் வந்து மனமாற இளைப்பாறி கவலைகள் மறந்து செல்லலாம். ஆஹா அற்புதமான இடம் என்று குழந்தைகளும் துள்ளிக்குதிப்பார்கள்.
Before You Go
Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?
ட்ரெண்டிங் செய்திகள்





















