Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI Today (14-01-2026): போகி பண்டிகை காரணமாக எறியூட்டப்பட்ட பொருட்களால், புகைமூட்டம் சூழ்ந்து சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

Chennai AQI Today (14-01-2026): போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே பரவலாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
போகி கொண்டாட்டத்தால் காற்று மாசுபாடு:
பழையன கழிதல், புதியன புகுதல் என்ற தத்துவப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14ம் தேதி போகிப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில், மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்கள், தீய குணங்கள் ஆகியவற்றை புறந்தள்ளி, வாழ்வில் வளம் பெறவும், மகிழ்ச்சிகான வழியை நாடவும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு மாறாக வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதையே போகி என கருதி, காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கக் கூடிய நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்றைய போகி கொண்டாட்டமும் சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பரவலாக காற்றிம் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அடங்காத சென்னையன்ஸ்.. மூச்சு முட்டும் தலைநகர்..
சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டிடங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், காற்றோட்டம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் போகி நெருப்பால் ஏற்பட்ட தூசியானது ஒரே இடத்தில் நீண்ட நேரத்தில் சுற்றி திரிகிறது. ஏற்கனவே நிலவும் பனிப்பொழிவுடன் தூசியும் கலக்க, அடந்த பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. குழந்தைகள், வயதானவர்கள், சுவாசப் பிரச்னைகள் உடையவர்கள் மற்றும் அதிகாலையில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். அடர்பனியால் அதிகாலையில் வாகனம் ஓட்டுபவர்கள், எதிரே வரும் வாகனங்களை கூட உணரமுடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் காற்றின் தரம்
காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத நிலையை எட்டி இருந்தது. குறிப்பாக ஆழ்வார் நகர்,அன்னை சத்யா நகர், டேவிட்புரம், கொடுங்கையூர், பெரவல்லூர், பெருங்குடி மற்றும் பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 500-ஐ கடந்து மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. அபிராமபுரம், ஆலந்தூர், அரும்பாக்கம், காந்தி நகர் எண்ணூர், கொரட்டூர், மணலி,நீலாங்கரை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் 200 முதல் 400 புள்ளிகளை கடந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், காறின் தரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் சராசரியாக காற்றின் தரம் 305 புள்ளிகளை எட்டியுள்ளது. சுவாசிக்க ஏதுவான காற்றின் தரநிலைக்குறியோடு 0 முதல் 50 ஆகவும், ஏற்றுக்கொள்ளும் வகையில் 50 முதல் 100 வரையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதுமான காற்றின் தரம்
இன்றைய காலை நேர நிலவரப்படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தா காற்றின் தரக்குறியீடு 500 புள்ளிகளை கடந்து இருந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல தற்போது 199 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதுதொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறி பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை எரித்ததே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்ட காரணமாக கூறப்படுகிறது.























