Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Pongal 2026 Kappu Kattu: காப்புக் கட்டுதலின் பின்னணியில் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியங்கள், காப்பு கட்டுதல் என்றால் என்ன?, காப்புக் கட்டில் இடம்பெறும் பொருட்கள், காப்பு கட்ட சிறந்த நேரம், மற்றும் காப்பு கட்டு முறை குறித்த தகவலை இங்கே காணலாம்.

தைப்பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது புதுப்பானை, கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து. ஆனால், பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் படியாக அமைவது 'காப்புக் கட்டுதல்' ஆகும்.
தமிழர் மரபின் கவசம் 'காப்பு கட்டுதல்'
'தை பிறந்தால் வழி பிறக்கும்" "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற இலக்கணத்திற்கு இணங்க, தைத் திருநாளை வரவேற்கத் தமிழகம் தயாராகி வருகிறது. பொங்கல் பண்டிகையின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் 'காப்பு கட்டுதல்' நிகழ்ச்சி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை போகி நாளான இன்று (14-01-2026) கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. இது வெறும் சடங்கு மட்டுமல்ல, தமிழர்களின் மருத்துவ அறிவையும், இயற்கையுடனான பிணைப்பையும் பறைசாற்றும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
காப்பு கட்டுதல் என்றால் என்ன?
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, போகிப் பண்டிகை அன்று வீட்டின் நிலை வாசல்கள், மாட்டுத் தொழுவம் மற்றும் கிணறு போன்ற இடங்களில் மருத்துவக் குணமிக்க இலைகள் மற்றும் பூக்களைக் கொண்டு காப்பு கட்டுவது வழக்கம். 'காப்பு' என்ற சொல்லுக்கு பொருள் 'பாதுகாப்பு' ஆகும். தீய சக்திகள், நோய் கிருமிகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் ஒரு 'பாதுகாப்பு கவசமாக' இது கருதப்படுகிறது.
காப்புக் கட்டில் இடம்பெறும் முக்கிய 5 மூலிகைகள்:
காப்பு கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் செடிகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக இதில் ஐந்து வகையான பொருட்கள் இடம்பெறுகின்றன:
1.வேப்பிலை: வேப்பிலை ஒரு மிகக்சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. ஆன்மீக ரீதியாக இது மாரியம்மனின் அடையாளமாக கருதப்படுகிறது.
2.ஆவாரம் பூ: "ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ" என்ற பழமொழிக்கேற்ப சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் பொன்னிறப் பூக்கள் மங்கலத்தின் அடையாளமாக உள்ளது.
3.சிறுபீளை (கூரைப்பூ): பொங்கல் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த வெண்ணிறப் பூக்கள், சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் மருத்துவ குணம் கொண்டவை. இது வறுமையை விரட்டி வளத்தைத் தரும் என்பது விவசைகளின் நம்பிக்கை.
4.தும்பை பூ : தூய்மையின் அடையாளம். தலைவலி மற்றும் விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படும் தும்பை, ஈசனுக்குப் பிரியமான பூவாகும்.
5.மா இலை: மற்ற இலைகளை விட மாவிலை நீண்ட நேரம் ஆக்சிஜனை (Oxygen) வெளியிடும் தன்மை கொண்டது. இது வீட்டின் காற்றைத் தூய்மைப்படுத்தி புத்துணர்வைத் தருகிறது.
மார்கழி மாதத்தின் குளிரும், பனியும் விலகி தை மாதம் பிறக்கும் போது, தட்பவெப்ப நிலை மாறுகிறது. இந்த கால மாற்றத்தின் போது வைரஸ் கிருமிகள் மற்றும் பூச்சிகளின் பெருக்கம் அதிகமாக இருக்கும். நம் முன்னோர்கள் இந்த கிருமிகளிடமிருந்து வீட்டைக் காக்கவே, கிருமிநாசினி பண்புகள் கொண்ட இந்த மூலிகைகளை வாசலில் கட்டும் முறையைக் கொண்டு வந்தனர். இது ஒரு வகையான இயற்கை பாதுகாப்பு வேலி (Natural Bio-fence) ஆகும்.
காப்பு கட்டு முறை:
போகி அன்று அதிகாலையிலேயே வீட்டைச் சுத்தம் செய்து, மஞ்சள் பூசி, அதன் மேல் இந்த மூலிகை கொத்துகளைக் கட்டுவார்கள். சில இடங்களில் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகளையும் இதனுடன் இணைப்பதுண்டு. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான ஏர்க்கலப்பை, கிணறு மற்றும் கால்நடைகளுக்கும் காப்புக் கட்டி நன்றியை வெளிப்படுத்துவார்கள்.
முன்பெல்லாம் காப்பு கட்டுவதற்கான மூலிகைகளை மக்கள் காடுகளுக்குச் சென்று நேரடியாகப் பறித்து வருவார்கள். ஆனால், இன்று நகரமயமாக்கல் காரணமாக இவை அனைத்தும் சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. பொங்கல் சந்தைகளில் ஆவாரம்பூ மற்றும் கூரைப்பூ கட்டுக்கள் தற்போது விற்பனைக்குக் குவிய தொடங்கியுள்ளது.
காப்பு கட்டுதல் என்பது தமிழர்களின் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஆரோக்கிய வாழ்விற்கான பாடம். நவீன காலத்தில் கிருமிநாசினி தெளிப்பான்களை (Sanitizers) பயன்படுத்துவதற்கு முன்பே, இயற்கையான முறையில் கிருமிகளை ஒழிக்கும் நுட்பத்தைத் தமிழர்கள் கையாண்டுள்ளனர் என்பதற்கு காப்பு கட்டுதல் ஒரு சாட்சி ஆகும்.
காப்பு கட்ட சிறந்த நேரம் | Kappu Kattu Nalla Neram 2026
காலை 9.30 மணி முதல் 10:15 மணி வரை
மாலை 4:45 மணி முதல் 05:45 மணி வரை
பொங்கல் பானை வைப்பதற்கான உகந்த நேரம்
பொதுவாகக் நாள்காட்டியில் காலை 7:00 முதல் 9:00 மணி வரை நல்ல நேரம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே எழுந்து பொங்கலுக்கான ஆயத்தப் பணிகளைச் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரிய உதயம் ஆகும் போது பொங்கல் பானையில் இருந்து பால் பொங்கி வர வேண்டும். அதுவே மிகச் சிறந்து






















