Wonderlaவையே தூக்கி சாப்பிட வந்தாச்சு மாதவரம், மணலி படகு குழாம்.! இவ்வளவு வசதிகளா? கட்டணம் எவ்வளவு.?
Chennai Madhavaram and Manali boat house: சென்னையில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மணலி மற்றும் மாதவரத்தில் புதிய வசதிகளோடு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புதிய சுற்றுலா தளம்
இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஓய்வு தான் முக்கிய மருந்தாக உள்ளது. எனவே வார விடுமுறை நாட்களில் குடும்பத்தோடும் அல்லது நண்பர்களோடும் சுற்றுலாவிற்கு புறப்பட்டு விடுவார்கள். இந்த நிலையில், சென்னையை சுற்றி பல சுற்றுலா தளங்கள் உள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர்கள் பூங்கா, வண்டலூர் பூங்கா என இயற்கை சார்ந்த இடங்கள் உள்ள நிலையில், தற்போது பல ஷாப்பிங் மால்களும் சென்னையில் அணிவகுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் கேரளாவில் மிகவும் பிரசித்திபெற்ற வொண்டர்லாவும் சென்னையில் முக்கிய சுற்றலா தளமாக மாறி வருகிறது. தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்து வருகிறார்கள்.
ஆனால் கட்டணம் தான் நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல், முட்டுக்காடு போன்ற பகுதிகளில் உள்ள படகு இல்லம் போல் சென்னையிலும் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் மொத்தம் ரூபாய் 39.78 கோடி மதிப்பீட்டில் 5 வளர்ச்சித் திட்டங்களானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மாதவரம் மற்றும் மணலி ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் தான் சுற்றுலா பயணிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மாதவரம் ஏரி படகு குழாம்
மாதவரம் மண்டலத்தில் நீர்நிலை பகுதியான மாதவரம் ஏரி 2,67,540 சதுர மீட்டர் பரப்பளவுடன், 2,350 மீட்டர் சுற்றளவுடன், 4,57,488 கனமீட்டர் நீர் கொள்ளளவு கொண்டதாக இருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் காரணமாக நீரின் கொள்ளளவு 5,77,879 கனமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஏரியினை மேம்படுத்தும் வகையில் கிழக்குப் பகுதியில் செடி, கொடிகள் அகற்றுதல். பக்கவாட்டுச் சுவர், நடைபாதை, புல்தரை நடைபாதை, குடிநீர் வசதி, பசுமைப் பரப்பிற்காக மரம், செடி நடுதல், நுழைவு வாயில், கழிப்பறை, உணவு வழங்கும் அறை, முதலுதவி மையம், காத்திருப்பு கொட்டகை, தடுப்புச்சுவர். வாகன நிறுத்த வசதி. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மின்வசதி உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் இரண்டு இருக்கைகள் கொண்ட 5 மிதி படகுகள், நான்கு இருக்கைகள் கொண்ட 5 FRP மிதி படகுகள், எட்டு இருக்கைகள் கொண்ட 5 மோட்டார் இயந்திர படகுகள் மற்றும் 2 ஜெட்ஸ்கி (Jetski) ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு HDPE படகு ஆகிய 18 புதிய படகுகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.
மணலி ஏரி படகு குழாம்
மணலி மண்டலம், வார்டு-20க்குட்பட்ட மணலி ஏரியில் அம்ரூத் 20 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 29 ஏக்கர் பரப்பளவில் 1.787 மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. தற்போது 12 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீர்த்தேக்கம் உடையதாக உள்ளது. இந்த ஏரியில் கரைகளைப் பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தூர்வாருதல், சுற்றுச்சுவர். ஏரிக்கு நீர்வரத்துக் கால்வாய்கள், வாகன நிறுத்த வசதி. இருக்கைகள். பசுமைப் பரப்பு, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, கைப்பிடிகள், மின்வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.102 கோடி மதிப்பீட்டில் இரண்டு இருக்கைகள் கொண்ட 5 மிதி படகுகள், நான்கு இருக்கைகள் கொண்ட 4 FRP மிதி படகுகள், எட்டு இருக்கைகள் கொண்ட 4 மோட்டார் இயந்திர படகுகள், 2 ஜெட்ஸ்கி (Jetski) ஸ்கூட்டர்கள் ஆகிய 15 புதிய படகுகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.
கட்டணம் எவ்வளவு.?
மணலி மற்றுப் மாதவரத்தில் தொடங்கப்பட்டுள்ள படகு குழாமில் பல்வேறு படகு சவாரிகள் உள்ளது. இதனை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பொறுப்பேற்று வழிநடத்த உள்ளது. எனவே இந்த படகு சவாரிக்கான கட்டணத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இருந்த போதும் சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு படகு குழாமில், மோட்டார் படகுகள் (8 பேர்) சுமார் 1,050 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, ஸ்பீட் போட் (3 பேர்) ரூ 1,200-க்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இணையான கட்டணமே வசூலிக்கப்படும் என சுற்றுலா துறை அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






















