Margazhi 2024: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மார்கழி மாத பிறப்பை அடுத்து சிறப்பு வழிபாடு!
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தமிழ்மாத மார்கழி பிறப்பை அடுத்து சிறப்பு கோ பூஜை வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தமிழ் மாத பிறப்பான மார்கழி மாத பிறப்பை அடுத்து சிறப்பு கோ பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
மூன்று நிலைகளில் சிவபெருமான்
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
தமிழ் மாதம் மார்கழி பிறப்பை அடுத்து நடைபெற்ற கோ பூஜை
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பன்று சிறப்பு கோ பூஜை நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழ் மாதமான மார்கழி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது.
Margazhi 2024: பக்தர்களே! மார்கழியில் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மற்றும் கன்றுக்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர். தொடர்ந்து கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. முன்னதாக காஷி கொடுத்த நாயகருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடந்தது .தொடர்ந்து திரளான பக்தர்கள் தேவார பதிகங்கள் பாடி 63 நாயன்மார்களை வழிபாடு செய்தனர். இதேபோன்று மார்கழி மாத பிறப்பை எடுத்து மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

