மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கவுள்ளது !
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து நாளை காலை திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கவுள்ளது..
மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக நாளை காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெறவுள்ளது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளவுள்ளனர். காலை 6.30 மணிக்கு தேரானது பக்தர்களால் வடம்பிடித்து இழுக்க தொடங்கவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்
சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது. தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கவால்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாசி வீதிகளில் உயரமாக செல்லும் மின்வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















