உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
தியாகத்திருநாள் பக்ரித்: மதுரையில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் சிறப்பு தொழுகை; ஏழை எளியோருக்கு குர்பானி இறைச்சி வழங்கி கொண்டாட்டம்.

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
மதுரையில் பக்ரித் பண்டிகை
ஈதுல் அல்ஹா எனும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், தமுக்கம் மைதானம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம், ஆனையூர், கலைநகர், தபால்தந்திநகர், வள்ளுவர் காலனி, சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திடல்களிலும்(திறந்தவெளி), பள்ளிவாசல்களிலும் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
பெருநாள் சிறப்பு தொழுகை
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர். திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள். மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகை
மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில் இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு துஆ செய்தனர்.
வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.
பக்ரித் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர். இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















