![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aani Karthigai Urchavam: பழனி முருகன் கோயில் ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் ஆனி மாத கார்த்திகை உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
![Aani Karthigai Urchavam: பழனி முருகன் கோயில் ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு Aani month 2023 Large Number of Devotees Attended Karthigai Urchavam Palani Murugan Temple Had Sami Darshan TNN Aani Karthigai Urchavam: பழனி முருகன் கோயில் ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/b480e4832834919ab5ddd8247c448ca31664459979024224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆனி மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகம் பேர் வருகை புரிந்தனர். எனவே கோவில் சார்பில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கூட்டம் காரணமாக தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி கோயிலில் நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பழனி கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)