துரத்தும் போர் குற்றங்கள்...இலங்கை முன்னாள் அதிபர்கள் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக கனடா தடை...!
உள்நாட்டு போரின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு பேருக்கு எதிராக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா தடைகளை விதித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர்கள் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்பட நால்வருக்கு எதிராக கனடா அரசு தடை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போரின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு பேருக்கு எதிராக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா தடைகளை விதித்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி இந்த நபர்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கனடாவும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வேண்டுகோளை விடுத்துள்ள போதிலும் அந்நாட்டு அரசாங்கம் தனது மனித உரிமை சட்டங்களை மட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகளையே எடுத்துள்ளது.
இது பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதி கிடைப்பதில் முன்னேற்றத்தை தடுக்கின்றது. அமைதி நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கின்றது.
மிக மோசமான மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களிற்கு நீதி அவசியம். இதன் காரணமாகவே இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை உருவாக்குவது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்து வருகின்றது.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதி செய்தி இது எனவும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
26ஆண்டு காலமாக, இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் இயக்கிற்கும் இடையே நடந்த உள்நாட்டு போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இரண்டு தரப்பின் மீதும் போர் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, போரின் இறுதி கட்டத்தில் மோசமான முறையில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறின.
Canada imposes sanctions on Rajapaksa brothers of Sri Lanka for human rights violations against Tamils from 1983 to 2009. https://t.co/icG3kxHLcM
— Ashok Swain (@ashoswai) January 10, 2023
2007 முதல் 2009 வரையிலான இறுதி கட்ட போரில் தமிழ்மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புத்துறை செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இந்த போர் குற்றங்கள் நடந்ததாக உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.