Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
'ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்ற கிரிஷ் சோடங்கர் கருத்தை தனியாக எடுத்து காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் செல்வபெருந்தகை’

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை திமுக கூட்டணி கட்சிகள் எழுப்பி வரும் நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று அனைவருக்கும் தகவல் அனுப்பிவிட்டு, அதற்கான கதவை இழுத்து பூட்டியிருக்கிறது திமுக.
தலைவலியாக மாறிப்போன ஆட்சியில் பங்கு முழக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தன்னுடைய வலுவான கூட்டணியை தக்க வைத்து, தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது திமுக. அதோடு, தொண்டர்களையும் நிர்வாகிகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க ‘உடன்பிறப்பே வா’ ஓரணியில் தமிழ்நாடு, நிர்வாகிகளுடன் ஒன் டு ஒன், மண்டல மாநாடுகள், பூத் வாரியான கள ஆய்வுகள், முதலமைச்சரின் மாவட்ட விசிட் என படு வேகமாக செயல்பட்டு வருகிறது அக்கட்சி. ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் திமுக இயங்கி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு என்ற முழக்கம் அவர்களுக்கு தலைவலியாக மாறிப்போயிருந்தது.
கொளுத்திப் போட்ட விஜய் – ஒத்துக்கொண்ட செல்வபெருந்தகை
தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கியபோது ஆட்சியில் பங்கு என்று விஜய் எழுப்பிய முழக்கத்தை, திமுக கூட்டணி கட்சிகளும் கையில் எடுத்துக்கொண்டன. அதற்கான முதல் குரலை எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனாலும், ஆட்சியில் பங்கு என்று பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று அந்த நகர்வில் இருந்து ஒதுங்கிக்கொண்டார் திருமாவளவன். அடுத்து, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஸ் உள்ளிட்டோர் பேச, அது திமுக தலைமையை உஷ்ணமாக்கியது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரும் அதே பாணியில் பேச, அதை யாரும் எதிர்பாராத வகையில் ஆமோதித்திருக்கிறார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை. அதுமட்டுமின்றி, அந்த வரிகளை மட்டும் எடுத்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி இடதுசாரிகளும் இதே மாதிரியான பாணியை கையாள தொடங்கியிருக்கும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது திமுக தலைமை.
கூட்டணியில்தான் பங்கு ; ஆட்சியில் இல்லை – முற்றுப்புள்ளி வைத்த திமுக
ஆட்சியில் பங்கு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை கள நிலவரத்தோடு தன்னுடைய தோழமை கட்சிகளுக்கு எடுத்துச் சொல்லியிருக்கும் திமுக. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளது. அதோடு, மீண்டும் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கும் நிலையில், இப்படியான பேச்சுக்கள் கூட்டணியில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் எனவும் தன்னுடைய கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
கூட்டணியில் குழப்பம் - ஈபிஎஸ் அட்டாக்
நேற்று கூட திருத்தணி பிரச்சாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை குறிப்பிட்டு திமுக கூட்டணியில் குழப்பம் உருவாகிவிட்டது என்று பேசியிருந்தார். இதையெல்லாம் கணக்கிட்ட திமுக தலைமை, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிகள் குறித்து பேசிக்கொள்ளலாம் என்றும் இப்போதைக்கு இதுபோன்ற தேவையற்ற பேச்சுக்களை கைவிடுமாறும் தன்னுடைய கூட்டணி கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.
முதல்வரிடம் பேசிய ப.சிதம்பரம்
சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்திடமும் இது குறித்து முதல்வர் விரிவாக பேசியதாகவும், அதனை ஏற்றுக்கொண்ட ப.சிதம்பரமும், தேசிய தலைமையிடம் இது குறித்து தெரிவிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது





















