![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஹெலிகாப்டர் விபத்து மீட்புப் பணிகள் : தமிழக அரசுக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு
இந்தியாவே பெருமைப்படும் நிலையில் 100க்கு 100% சதவிதம் தமிழகம் நடந்து கொண்டது - திருவண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
![ஹெலிகாப்டர் விபத்து மீட்புப் பணிகள் : தமிழக அரசுக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு Tamil Nadu BJP leader Annamalai praises Tamil Nadu government for giving 100 marks out of 100 for helicopter crash rescue operations ஹெலிகாப்டர் விபத்து மீட்புப் பணிகள் : தமிழக அரசுக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/17/61d9b5e9bd6d654b6e88fc118c5efd03_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலையில் இன்று (17.12.2021) மண்டல பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கட்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக கூட்டத்திற்கு சென்ற நிர்வாகிகளிடம் இருந்து அவர்களுடைய செல்போன் வாங்கிக்கொண்டனர். அதன் பின்னர் தான் அனுமதித்தனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் நடைப்பெற்ற உள்ள , ''உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது என்றும். உள்ளாட்சித் தேர்தலை வாய்ப்பாகப் பார்க்கிறோம். கட்சியை வலுப்படுத்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. மக்களுக்குச் சிறந்த தலைவர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் மூலமாக மக்கள் பணி செய்ய உள்ளோம். கமிஷன் பெற்று பணியாற்றும் தலைவர்களாக இல்லாமல், முன்மாதிரியாக மக்கள் பணி செய்வார்கள் என்றார்.மேலும் பாஜக அரசின் சாதனைகள், திமுக ஆட்சி செய்யும் தவறுகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வோம். உள்ளாட்சியில் 80% சதவீதப் பணிகள் மத்திய அரசின் பணியாகும்.
சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்கிறது. இதனை பாஜக வன்மையாக எதிர்க்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க, இதுபோன்று செய்கின்றனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது என்றார்.
பின்னர் இனிமையான பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் கொண்டாடப் பரிசுத் தொகையைத் தமிழக அரசு கொடுக்க வேண்டும். அதிமுக முன்னால் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். ஆதாரத்தைக் கொடுக்காமல் அவதூறு பரப்புவது என்பது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்காது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தலைவர்களின் அதிகாரங்களிலும், ஊராட்சியில் எந்தகைய முறைகேட்டில் தற்போதைய திமுக அரசு என்ன தவறுகளை செய்துள்ளது என்பது குறித்து முழு ஆதாரங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் தன்னிடம் ஆதாரத்துடன் அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அதனை ஆராய்ந்து இரண்டு நாட்களில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடுவேன் என்று தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்திருந்தால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கிக் கொடுத்திருப்போம். பஞ்ச பூத தலங்களில் யானையைக் கொடுக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் வலியுறுத்தப்படும்.
”திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முடியாதது, லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் துயரமாக உள்ளது. தீபத் திருவிழாவுக்கு வந்தவர்களை தீவிரவாதிகளை சோதனையிடுவது போன்று காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து விட்டால், காவல்துறையின் கம்பீரத்தைப் பார்க்கலாம். காவல்துறை கம்பீரமாக இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் ”திருவண்ணாமலையில் கடந்த 22 மாதங்களாக பொளர்ணமி கிரிவலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மாநில அரசு நீக்க வேண்டும் என்றும்,பக்தர்கள் பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியுடன் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்றார்
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைந்த சம்பவத்தின் போது, மீட்புப் பணியில் தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். அரசியலுக்காக பாஜக குற்றம் சுமத்தாது. துரிதமாகப் பணியைச் செய்துள்ளனர். உயிரைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். 100-க்கு 100 மதிப்பெண் வழங்க வேண்டும். முதல்வரில் தொடங்கி கடைசி மனிதன் வரை, 3 நாட்களுக்குச் செய்த மீட்புப் பணியின் மூலம், இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இந்தச் சம்பவத்தில் தமிழக அரசுடன் நாங்கள் இருப்போம்' என்று அண்ணாமலை தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)