![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vaikunda Ekadasi: கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா..ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
![Vaikunda Ekadasi: கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா..ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு Vaikunda Ekadasi: Lakhs of devotees darshan at the opening of the gate of heaven at Srirangam Ranganatha temple.. Vaikunda Ekadasi: கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா..ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/abe73b4057a969db85a3981be465d2341703308408745184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றபடும் சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். இதில் முக்கியமான விழாவாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ம்தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13ம்தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9ம் திருநாளான நேற்று முந்தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் தெள்ளியீர் பாசுரம், முத்துக்குறி-வியாக்யானம் நாளின் அபிநயத்திற்கேற்ப முத்துக்கொண்டை அலங்காரத்தில், முத்து கபாய், முத்து நேர் கிரீடம், பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை, முத்து அபய ஹஸ்தம், முத்து கர்ண பத்ரம், முத்து திருவடி, 2 வட முத்து மாலை, பின் சேவையில் முத்தங்கி அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார். பகல் பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.
இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.
அதனைத்தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்து பக்தி உலாத்தல் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 3000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன.1ம் தேதி தீர்த்தவாரி, 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது. மேலும் நிகழ்வில் எந்தவிதமான ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)