கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர் நல வாரியம்; உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தநல வாரிய உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் இந்தநல வாரிய உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக பணிபுரியும் கிறிஸ்தவ தேவாலயத்தின் நிர்வாகி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களை போன்றே வழங்கப்படும்.
வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள்
கல்வி உதவித்தொகை 10-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூபாய் 100000 விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூபாய் 10000 முதல் ரூபாய் 100000 வரை, இயற்கை மரண உதவித்தொகை ரூபாய் 20000 இமச்சடங்கு உதவித்தொகை ரூபாய் 5000, திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூபாய் 3000 மற்றும் பெண்களுக்கு ரூபாய் 5000, மகப்பேறு உதவித்தொகை ரூபாய் 6000 மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூபாய் 3000 கண்கண்ணாடி உதவித்தொகை ரூபாய் 500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூபாய் 1000. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.






















