![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
நெல்லை: மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுக பெண் கவுன்சிலர் பதாகையுடன் தர்ணா போராட்டம்
கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் முறையிட்டோம். எந்த பணிகளும் எங்களது பகுதிகளில் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
![நெல்லை: மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுக பெண் கவுன்சிலர் பதாகையுடன் தர்ணா போராட்டம் Nellai: Dharna protest with banner of DMK women councilor in front of Municipal Corporation Office நெல்லை: மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுக பெண் கவுன்சிலர் பதாகையுடன் தர்ணா போராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/20/f25cf875998efeb7b8bff6dcd4e76e401666263341740109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறவிருந்த கூட்டம் திடீரென கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் பிஎம். சரவணன் அறிவித்தார். குறிப்பாக திமுக வழக்கறிஞர் ஒருவர் மறைவு காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி 7 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திரா மணி என்பவர் கருப்பு சேலை அணிந்தபடி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது திடீரெனெ அவர் அலுவலகத்தின் நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து கையில் பதாகை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த பதாகையில் பெண்களுக்கு மாநகராட்சியில் சம உரிமை அளித்து அதிக மாமன்ற பெண் உறுப்பினர்களை உருவாக்கிய ஸ்டாலின் ஆட்சியில் பெண் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை 8 மாத காலமாக நெல்லை மாநகராட்சி நிறைவேற்றவில்லை. 7 வது வார்டு மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இது தான் நெல்லை மாநகராட்சியில் நிலைமையா?? என்ற வாசகத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவரை மேயரிடம் அழைத்து சென்றனர். பின்னர் தனது கோரிக்கையை கவுன்சிலர் இந்திராமணி மேயரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கவுன்சிலர் இந்திராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் முறையிட்டோம். எந்த பணிகளும் எங்களது பகுதிகளில் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக ராஜினாமா செய்யப்போகிறேன் என்று தெரிவித்தார் ஆளுங்கட்சி கவுன்சிலரே மேயரை கண்டித்து போராட்டம் நடத்திய சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)