![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
நெல்லையில் நிவாரண உதவி வழங்கிய நடிகர் விஜய்...விஜயை காண வந்தோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம்
2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
![நெல்லையில் நிவாரண உதவி வழங்கிய நடிகர் விஜய்...விஜயை காண வந்தோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் Actor Vijay who gave relief in rice paddies got injured in a crowd of people who came to see Vijay - TNN நெல்லையில் நிவாரண உதவி வழங்கிய நடிகர் விஜய்...விஜயை காண வந்தோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/30/13d9fc6329ff5e9a9fc489d948ac29f81703936465421571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் இன்று வழங்கினார். குறிப்பாக நெல்லை கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வீடு இழந்தவர்களுக்கும் அவர் நிதி உதவியும் வழங்கினார். இதற்காக அவர் இன்று மதியம் 12 மணி அளவில் தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். பின் சாலை மார்க்கமாக பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தார். இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பயனாளிகளை, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ரசிகர் மன்றத்தினர் தேர்வு செய்து மாதா மாளிகைக்குள் அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் தொகுப்பையும், வேஷ்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், விஜய் வழங்கினார். சுமார் 1500 பேருக்கு சைவ மதிய உணவும் அங்கேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தின் போது மின்வாரிய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின்சன் என்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. நடிகர் விஜய் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள், ரசிகர்கள் என யாரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. நிவாரணம் பெற கூடிய டோக்கன் வைத்திருக்கும் பயனாளிகள் மட்டுமே ஹாலில் அனுமதிக்கப்பட்டனர். நடிகர் விஜயை காண்பதற்காக அவரது ரசிகர்களும் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார். மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து 1500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் நெரிசலில் சிக்கினர், இதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)