ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தூத்துக்குடி செல்லும் ரயில்களில் மாற்றம்: தேதி & வழித்தட விவரங்கள் இதோ!
தூத்துக்குடியில் இருந்து புறப்படும், நிறுத்தப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செயப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்படும், நிறுத்தப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செயப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக சில ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு சந்திப்பில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16792) வருகிற டிசம்பர் 14 முதல் ஜனவரி 27 வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்படாது. மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு சந்திப்பு செல்லும் ரயில் (வண்டி எண்: 16791 ) வருகிற டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும். தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்படாது.
தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16766) வருகிற டிசம்பர் 20ம் தேதி தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும். தூத்துக்குடி - கோவில்பட்டி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16765) வருகிற 21ம் தேதி அன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டும்.

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12693) வருகிற டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 12694) வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து சென்னைக்கு புறப்படும்.
மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16236) வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16235) வருகிற டிசம்பர் 21,22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து இந்த ரயில் மைசூருக்கு புறப்படும்.
ஓகாவில் இருந்து தூத்துக்குடி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 19568) வருகிற 19ம் தேதி கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 19567) தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து ஓகாவிற்கு ரயில் புறப்படும். தூத்துக்குடி - கோவில்பட்டி இடையே ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.





















