சீரமைப்பீங்களா ஆபீசர்... அச்சத்தில் உள்ளனர் விவசாயிகள்: என்ன காரணம்?
ராமநாதபுரம் ஊராட்சி வழியாக முதலைமுத்து வாரி வாய்க்கால் ஓடுகிறது. இதை சுற்றி ஏராளமாக கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக ஓடும் முதலைமுத்து வாரி வாய்க்கால் செடி, கொடிகள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. தற்போது சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர். மேலும் மழைக்காலம் என்பதால் பேய்வாரி வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் அருகில் உள்ள வயல்களில் சாகுபடி பயிர்களை பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக முதலைமுத்து வாரி வாய்க்கால் ஓடுகிறது. இதை சுற்றி ஏராளமாக கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த வாய்க்கால் சக்கரசாமந்தம், களிமேடு வழியாக செல்கிறது. இந்த வாய்க்காலில் குறுவை சாகுபடி முன்னதாக ஒரு பகுதி மட்டும் தூர் வாரப்பட்டது. முறையாக முழுமையாக தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுக்கின்றனர். இதனால் தற்போது செடி, கொடிகள் மண்டி வாய்க்காலா அல்லது காடா என்று தெரியாத அளவிற்கு மாறி உள்ளது.
இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி, சக்கரசாமந்தம், களிமேடு உட்பல பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் உள்வாங்கும் இந்த பேய்வாரி வாய்க்காலின் தற்போதைய நிலையில் சிறிய மழைக்கு கூட தாங்காத நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது. மேலும் இந்த முதலைமுத்து வாரி வாய்க்காலில் குப்பைகளும் கொட்டப்பட்டு மண் மேடிட்டு காணப்படுகிறது.
மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு பேய்வாரி வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















