கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் எங்கு அமைய உள்ளது? எம்.பி., கல்யாணசுந்தரம் சொன்னது என்ன?
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடம் பற்றி முடிவு செய்யவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்படும் என்று எம்.பி., கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
இதுகுறித்து எம்.பி., கல்யாணசுந்தரம் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வட இந்தியாவில் கும்பமேளா எப்படி நடக்கிறதோ அதுபோல் தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்திலிருந்து சரியாக திட்டங்கள் வகுத்து அறிக்கையாக கொடுத்தால் செய்து தருவதாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடம் பற்றி முடிவு செய்யவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்படும். கும்பகோணத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ஆய்வு செய்து, அனைவரிடமும் கருத்து கேட்டு அதன்பின்னர் தான் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடத்தப்படும் போராட்டம் எதிர்க்கட்சிகளின் வேலை. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கவர்னர் நேர்மையுள்ள மனிதராக இருந்தால் அவராகவே நீங்கிவிடுவார்.
கும்பகோணம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது. படித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதி செய்வதற்காக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலைகள் அப்புறப்படுத்தப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி வழக்கை திரும்ப பெற வைக்க வேண்டும்.
பாசனத்திற்கு வழியில்லாததால் கால்வாய்களை பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்காலாக பயன்படுத்தி விடுகின்றனர். இதற்காக மழை நீர் மட்டும் வடியும் வகையில் அமைக்கப்பட்டது. அதனை இடித்து விட்டார்கள். பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று இந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோயில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடரில் கும்பகோணத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

