மேலும் அறிய
Thiruvarur: அம்மாவிற்காக தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் - நெகிழ வைத்த மகன்
அம்மாவிற்காக தாஜ்மஹால் கட்டிய மகன். இறந்த தாய்க்காக 5 கோடி மதிப்பில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகனின் நெகிழ வைக்கும் செயல்.

தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம்
வயது மூப்பின் காரணமாக பெற்ற தாய், தந்தையரை பராமரிக்க இயலாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, தான் உண்டு, தன் மனைவி உண்டு, குழந்தைகள் உண்டு என்று சுயநலமாக மாறிப்போன மனிதர்கள் வாழ்கின்ற காலத்தில் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு ரூபாய் 5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் மகன் நினைவு இல்லம் கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனில் அரங்கேறி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அப்துல் காதர் ஜெய்லானி பீவி தம்பதியினருக்கு நான்கு மகள் ஒரு மகன். அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததுடன் தனது மகன் மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்துள்ளார்.
இதில் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ முடித்து விட்டு தற்போது சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். சிறுவயது முதல் தன்னை தனது அம்மா அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது அன்னையின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் அவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தாயின் நினைவலைகளால் தத்தளித்து வந்த நிலையில் இறந்த தனது தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்ட போது அம்மாவிற்கான நினைவுச்சின்னத்தை தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு, ராஜஸ்தானில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தாஜ்மஹால் வடிவில் இந்த நினைவு இல்லத்தை அரும்பாடுபட்டு கட்டியுள்ளனர். இந்த தாஜ்மால் வடிவ நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி திறப்பு விழா செய்யப்பட்டு பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தை எம் மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். ஐந்து வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது. இதில் தற்போது பத்து மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும், ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் ஆயிரம் நபர்களுக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தினந்தோறும் பார்த்து செல்கின்றனர். தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் உலகின் எட்டாவது அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
இந்தியா
தேர்தல் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion