தஞ்சை மேலவீதி அய்யங்குளம் நீரில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
அய்யங்குளத்தில் உள்ள தண்ணீர் பாசி, குப்பைகள் படிந்திருந்ததை அகற்றி சுத்தப்படுத்தும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சை மேலவீதி அய்யங்குளத்தில் மாநகராட்சி சார்பில் நடந்து வரும் பராமரிப்பு பணி மற்றும் குளத்து நீரில் படர்ந்து இருந்த பாசிகளை அகற்றும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை ஆண்ட மன்னர்கள் தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மை காண அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இதற்கு தண்ணீர் செல்வதற்கான மணி காஞ்சித் சுரங்க வழி தடங்கள் அமைக்கப்பட்டன. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அது அமைக்கப்பட்டது. மழை நீரை சேகரிக்கும் வகையில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர்.
பரந்து விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழை நீரும் சேமிக்கப்பட்டன. மேலும் பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் எக்காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காகதான். பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தின் போது மேலவீதி அருகே மிகவும் பிரம்மாண்டமான அய்யங்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான நீர்வழி பாதையும் அமைக்கப்பட்டது. இதனால் அதிக மழைப்பொழிவு காலங்களில் சிவகங்கை குளம் நிரம்பினாலும் அதில் உள்ள கூடுதல் தண்ணீர் மேலவீதியில் உள்ள அய்யங்குளத்தில் போய் சேர்வது போன்று நீர் வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டது.
தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி காலத்தின் போது மேலவீதியில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் காலப்போக்கில் இந்த குளம் ஆக்கிரமிப்பு, குப்பைக்கூளங்களால் மாசுப்பட்டு இருந்தது. தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த அய்யன் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
மேலும், குளத்தை சுற்றியுள்ள நடைபாதை பக்கவாட்டு சுவற்றில் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள், 9 நவரத்தினங்கள், 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநகராட்சிகளில் குளங்கள் பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தை பேணி காத்தல் பிரிவில் தஞ்சை அய்யன்குளம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அய்யங்குளத்தில் உள்ள தண்ணீர் பாசி, குப்பைகள் படிந்திருந்ததை அகற்றி சுத்தப்படுத்தும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. மேலும் சுற்றுச்சுவர் வர்ணம் பூசும் பணி தொடங்கியது. இதை கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.