விவசாய நிலங்கள் பாலைவனம் ஆகிடும்... கதறிக் கொண்டு வந்து மனு கொடுத்த 10 கிராம மக்கள்
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கலவை அலையால் அதிலிருந்து வெளிவரும் கரும்புகை கோவிலையும் அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது.

தஞ்சாவூர்: விவசாய நிலங்கள் இனி பாலைவனம் ஆகும் நிலையில் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க தார் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 10க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு அளித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
விவசாய விளைநிலங்களுக்கு நடுவே தார் தயாரிப்பு கலவை ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், சக்கர சமந்தம் பள்ளியேறி, வடகால் மரவணப்பட்டு எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட10-க் மேற்பட்ட கிராம மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர் அவர்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம் ராமநாதபுரம் கிராமத்தில் ஒருவர் தார் தயாரிப்பு ஆலை தொடங்கி நடத்தி வருகிறார். ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு சுவாச பிரச்சனைகள், கண் எரிச்சல் போன்ற பல்வேறு உடல் நல கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சக்கரசாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்பினார்
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ராமநாதபுரம் வட்டம் சக்கரசாமந்தம் அருகே புதிதாக மற்றொரு தார் தயாரிப்பு ஆலை தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது முறையான அரசு அனுமதி உடன் தொடங்க உள்ளதாக அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். சக்கரசாமந்தம், வடகால் அருகே விவசாய விளைநிலங்களின் மத்தியில் ஏற்கனவே இயங்கி வரும் கலவை ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் அந்த பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்து வருவதால் அதற்கும் பாதிப்பு உண்டாகிறது. தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கலவை அலையால் அதிலிருந்து வெளிவரும் கரும்புகை கோவிலையும் அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று தர குறியீட்டை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. தூய்மை காற்று கொண்ட நகரம் என தஞ்சாவூருக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது.
இந்நிலையில் இது போன்ற ஆலை நகரத்திற்கு மிக அருகில் அமைந்தால் இத்தகைய சிறப்பு நம்மை விட்டு செல்லும். எனவே நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வைக்கும் எங்களின் விளைநிலங்களை காப்பாற்றும் பொருட்டு இரண்டு தார் தயாரிப்பு கலவை ஆலைகளையும் இயங்க தடை விதிக்க வேண்டும். இல்லாவிடில் விவசாய நிலங்கள் வருங்காலத்தில் பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















