ஆரம்பம் என்னவோ பரபரப்பு... முடிந்தது என்னவோ புஸ்வாணம்: 10 நிமிடமே நடந்த தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சி 12 வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் எழுந்து பேச தொடங்கினார். அப்போது மேயர் நீங்கள் உங்கள் முறை வரும் பொழுது பேசுங்கள் என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர்: கூட்டத்திற்கான அறிவிப்பு ஒரு வாரத்துக்கு முன்பு கொடுக்கப்படவில்லை என திமுக கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் மாநகராட்சி கூட்டத்தை நடத்த விடாமல் வெளிநடப்பு செய்ததால் பத்து நிமிடத்திற்குள் கூட்டம் நிறைவு பெற்றது. இதற்கிடையில் அதிமுக பெண் கவுன்சிலருக்கும், திமுக பெண் கவுன்சிலருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது.
தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் தொடங்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை பழைய பேருந்து நிலையம் பகுதியில் திறந்து வைத்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு தெரிவித்த பின்னர் மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை பேசுமாறு மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

உடன் மாநகராட்சி 12 வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் எழுந்து பேச தொடங்கினார். அப்போது மேயர் நீங்கள் உங்கள் முறை வரும் பொழுது பேசுங்கள் என்று தெரிவித்தார். இருப்பினும் கவுன்சிலர் வெங்கடேஷ் இந்த கூட்டத்திற்கான அறிவிப்பு ஆறு நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை இன்று காலை தான் எங்களுக்கு வந்தது. 21 கவுன்சிலர்கள் அஜண்டாவை வாங்கவில்லை என கூறினார்.
ஆணையர் : மூன்று நாட்களுக்கு முன்பு அஜெண்டா கொடுத்து கூட்டத்தை நடத்தலாம்.
மேயர் சண்.ராமநாதன்: இனி வரும் கூட்டங்கள் குறித்து முன்பே அறிவிப்பு கொடுத்து நடத்துவோம் இப்பொழுது கூட்டத்தை நடத்தலாம்.
வெங்கடேஷ் : விதிமுறை மீறி நடத்தப்படும் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது.
மேயர்: கூட்டத்தை ரத்து செய்ய முடியாது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசலாம்.
இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் வெங்கடேஷ், ஆனந்த், அண்ணா பிரகாஷ், சுந்தர செல்வி, நீலகண்டன், செந்தில்குமாரி, உஷா, சுகந்தா கண்ணன், சுகந்தி, கலையரசன் உட்பட 19 கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று எழுந்து வெளியேறினர்.
இதற்கிடையில் எதிர்க்கட்சி கவுன்சிலர் கண்ணுக்குஇனியாள் உட்பட கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
மேயர் : கூட்டத்தை நடத்துவோம் அமருங்கள்.
அப்போது வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். கூட்டத்தை நடத்தக்கூடாது என்று தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவருக்கும் கண்ணுக்கு இனியாளுக்கும் மத்தியில் பிரச்சனை எழுந்தது.
தொடர்ந்து மேயர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
பின்னர் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் கண்ணனை சந்திக்க அவரது அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் அறை வாயிலேயே அமர்ந்தனர். அவர் தனது அறைக்கு வந்தவுடன் அவரிடம் அஜெண்டா கொடுப்பது குறித்து கேட்டனர். அப்போதும் ஆணையர் 3 நாட்களுக்கு முன்பு அஜெண்டா கொடுக்கலாம் என்று தெரிவித்தார். இதேபோல் எதிர்கட்சி கவுன்சிலர்கள் ஆணையரிடம் மனு அளித்தனர். இவ்வாறு பரபரப்பாக தொடங்கி புஸ்வாணம் போல் மாநகராட்சி கூட்டம் முடிந்தது.





















