![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!
Fish Seed Farm: கடந்த 26 ஆண்டுகளாக மீன் குஞ்சு பண்ணை நடத்தி அதை லாபகரமான தொழில் என்று இன்றளவும் நிரூபித்து வருகிறார் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை சேர்ந்த விவசாயி முருகேசன்.
![Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி! Success Story Soorakottai farmer who has been successfully and profitably running fish seed farm for 26 years tnn Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/f20c32d5ae1b7d87cfbeb880e958b7951717841563209733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: கடந்த 26 ஆண்டுகளாக மீன் குஞ்சு பண்ணை நடத்தி அதை லாபகரமான தொழில் என்று இன்றளவும் நிரூபித்து வருகிறார் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன்.
தங்கச்சுரங்கமாய் மீன் குஞ்சுகள்:
இவர் 6 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் மற்றும் உற்பத்தியில் பரபரப்பாக மீன் அறுவடையில் நடந்து கொண்டிருந்த போது தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 6 ஏக்கர் நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து இருக்கிறேன். இதை நர்சரி என்று சொல்வோம். இந்த நர்சரிகளில்தான் தங்கச்சுரங்கம் போன்ற மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த நர்சரிகள் சினை மீன்கள், மற்றவற்றில் கட்லா, ரோக், மிருகால், கண்ணாடிக் கெண்டை, பொட்லா, புல் கெண்டை என்று வகை வகையான மீன் குஞ்சுகள் இருக்கின்றன.
தரமான கடலைப்புண்ணாக்குதான் உணவு
சராசரியாக இங்கு மீன் குஞ்சுகளுக்காக வளர்க்கப்படும் மீன்களை இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை மாற்றி புதிய மீன்கள் விடுவோம். காரணம் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே சினை மீன்களின் தரம் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு அதன் முட்டைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். தாய் பருவம் என்பது 24 மாதங்கள்தான். அதனால் சரியான நேரத்தில் அதை மாற்றி புதிதாக மீன்களை வாங்கி வந்து மாற்றிவிடுவோம். நாங்கள் வளர்க்கும் மீன்களையே வைத்துக் கொள்வதில்லை. மீன்களுக்கான உணவை சரியான முறையில் வைக்க வேண்டும். தரமான கடலைப்புண்ணாக்குதான் உணவாக போடப்படுகிறது. மேலும் புளோடிங் பீட் உணவும் கொடுக்கப்படுகிறது.
முட்டைகள் இடும் காலம்
மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அதிகம் முட்டைகள் இடும் காலம். மே, ஜூன், ஜூலை ஆகியவை கர்ப்பக்காலம். பின்னர் முட்டை மீன் குஞ்சுகள் கிடைக்கும். மீன் வளர்ப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது அதிக வெப்பம் நிலவும் போதுதான். அப்போது மீன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நர்சரியிலும் ஷவர்கள் அமைத்து தண்ணீர் விடப்படுகிறது. இதனால் குளுமையான காற்றும் தண்ணீரில் ஜிலுஜிலுப்பும் இருப்பதால் மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன. குளங்களின் பிராணவாயு உற்பத்திக்கு சூரிய வெளிச்சம் இன்றியமையாதது. அதனால் சூரிய ஒளி குளங்களுக்கு தடையின்றிக் கிடைக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
கடின உழைப்பும், சரியானபடி மீன்கள் பராமரிப்பும் லாபத்தை அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை. பண்ணைக்குட்டைகள் ஒரு லட்சம் முட்டை மீன்குஞ்சுகளை இட்டு வளர்த்தால் சராசரியாக 40 ஆயிரம் மீன்குஞ்சுகள் கிடைக்கும். ஒவ்வொரு நர்சரியிலும் ஒவ்வொரு வகையான முட்டைமீன் குஞ்சுகள் விடப்படும். மீன்குஞ்சுகளை விற்பனை செய்கிறோம். இதை வாங்கி செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் நர்சரிகளில் இதை வளர்த்து பெரியதானவுடன் விற்பனை செய்வர். பலர் குத்தகைக்கு எடுத்த ஏரி, குளங்களில் இவற்றை விட்டு வளர்த்து பின்னர் பெரிதானவுடன் பிடித்து விற்பனை செய்வார்கள். இப்படி தமிழகம் முழுவதும் மீன் குஞ்சுகள் வரை இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
வியாபாரிகளுக்கு விற்பனை:
பல வியாபாரிகளும் வந்து மீன் குஞ்சுகளை வாங்கி குத்தகைக்கு எடுத்த நர்சரிகளில் விட்டு வளர்த்து விற்பதும் நடைமுறை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து மீன் குஞ்சுகளை வாங்கிச் செல்கின்றனர். வேகமாக வளருவதற்கு மீன் குஞ்சுகளின் தரம் முக்கியமானது. தரமான மீன்குஞ்சுகள் வேகமாக வளரும்.
அதிக பிழைப்புத்திறனையும் பெறுகின்றன. நர்சரிகளில் மீன்குஞ்சுகளின் தரம், குஞ்சு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட இனப்பெருக்க மீன்களின் தரம், உற்பத்தியான மீன் குஞ்சுகளின் தரம், நர்சரிகளில் நீர்த்தரத்தின் பராமரிப்பு, மீன்களுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், நர்சரிகளில் மீன்குஞ்சுகளில் இருப்பு அடர்த்தி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். நர்சரிகளில் உள்ள நீர்களை சரியாக கவனித்து அவற்றின் நிறம் மாறும் போது மாற்றிவிடுவோம்.
குளத்தை நன்கு பராமரிக்க வேண்டும்
தமிழ்நாட்டை பொருத்தவரையில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் மீன் வளர்க்கலாம். பொதுவாக மீன் வளர்க்க நீரின் தன்மை 7.5 ph இருக்க வேண்டும். அதே போல் மீன் வளர்ப்பில் மண் வளத்தையும் நீரையும் கெடுக்காத வகையில் குளத்தை பராமரிக்க வேண்டும். சூரிய ஒளி படும் வகையில் கிழக்கு மேற்கில் குளத்தை வெட்டிவிட்டு மீன் குஞ்சுகள் வெளியே போகாத வரையில் கரைகளை அமைத்து. அதன் பின்னர் மீன் குஞ்சுகளை அதில் விட்டு வளர்க்கலாம் காலை மற்றும் மாலை நேரத்தில் தீவனம் கொடுப்பது அவசியம்.
இரண்டு இன்ச் மீன் குஞ்சுகளை வளர்த்தால் அறுவடை செய்ய 10 மாதங்கள் ஆகும். இல்லை விரைவில் அறுவடை செய்ய வேண்டும் என்றால் 100 கிராம் குஞ்சுகளை குளத்தில் விட்டு ஒரு சில மாதங்களில் அறுவடையை தொடங்கலாம்.. ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் குஞ்சுகள் வரை வளர்க்கலாம். ஒரு டன் மீனை பிடிக்க ஒன்றரை டன் அளவிலான தீவனம் தேவைப்படும்.. ஆனால் நீரும் மண்ணும் சுத்தமாக இருந்தால் தீவன செலவு குறையும். அதேபோல் நீல அமிர்தம் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். குளத்தில் ப்ரொபையாடிக்ஸ் எனப்படும் மருந்தை பயன்படுத்த வேண்டும் இது கழிவுகளை மீன்கள் உண்ணாத வகையில் அழித்துவிட்டு முழுமையாக நல்ல தீவனங்களை உண்ணவும் ஆக்சிஜன் கிடைக்கவும் வழிவகை செய்யும்.
மீன்களுக்கு 20 சதவீத உணவுதான் அளிக்க வேண்டும்
நாம் வளர்க்கக்கூடிய ஒவ்வொரு வகையான மீனை மாதம் ஒரு முறையாவது பிடித்து அதை எடை வைத்து அதற்கு தேவையான தீவனத்தை கொடுக்க வேண்டும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் குறைவான எடை இருந்தால் 2% உடல் எடை அதிகரிக்க கூடிய தீவனத்தை தர வேண்டும். கண்ட தீவனங்களை அதிக அளவில் குளத்தில் கொட்டினால் மண்ணும் நீரும் வீணாகிவிடும் இதனால் மீன் குஞ்சுகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக மீன் வளர்ப்பை பொறுத்தவரையில் 80 சதவீத உணவு இயற்கையாகவே கிடைத்துவிடும் 20% உணவை மட்டுமே நாம் அளிக்க வேண்டும் அதிலும் 2% சதவீத உணவு உடல் எடையை அதிகரிக்கும் மேல் உணவாகும்..
மீன் வளர்ப்பில் பொருத்தவரையில் சில முறை லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. விவசாயம் போல தான் மீன் வளர்ப்பும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. யாராவது செய்ய வேண்டும் என்று எண்ணினால் அதை குறைந்த அளவில் முதலில் செய்து அதன் பின்னர் படிப்படியாக ஒரு ஏக்கரில் குளம் வெட்டி அதை சுற்றிலும் தென்னை மரத்தை நட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீன் வளர்ப்பில் கிடைக்கும் வருமானத்தை போல தென்னையிலும் வருமானம் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)