நெல் கொள்முதல் குளறுபடிக்கு காரணம் யார்? - நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம். கொள்முதலுக்கு எந்த முன்னேற்பாடு பணிகளும் செய்யாததால்தான் தாமதமாகி வருகிறது. தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார். பின்னர் அங்கு நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது விவசாயிகள் " கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நெல்மணிகளை சாலையில் கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். இந்த ஊரில் மூன்று கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால், சிட்டா அடங்கல் பெற தவித்து வருகிறோம். லாரிகள் முறையாக வராத காரணத்தால் கொள்முதலில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய மழையால் குவித்து வைத்துள்ள நெல் மணிகள் முளைத்து விட்டது. நெல்லை இங்கு கொட்டி வைத்து காத்திருப்பதால் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிட்டதக்கது. கொள்முதல் விஷயத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து விட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் இதுவரை எந்த முன்னேற்பாடு பணிகளும் செய்யவில்லை. அது தற்போது உள்ள சூழலை வைத்து அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.
சாக்குகள் தட்டுப்பாடு, போதிய லாரிகள் இயக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொள்முதல் தாமதமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கொள்முதல் தாமதத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி தான் காரணம் என மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி என்பது சத்தான அரிசியாகும். இந்த அரிசியால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பதால் மத்திய அரசு கொண்டுவந்த ஒரு நல்ல விஷயமாகும்.
தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறக்காமல், உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தியது தமிழக அரசுதான். தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம். இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்த பிறகுதான் கொள்முதல் தாமதத்தால் நெல்மணிகள் முளைத்த விவரமே தமிழக அரசுக்கு தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த ஒரு நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளை பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது, டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்சினையில் அரசு காட்டவில்லை.
மழைப்பொழிவு விவரங்களை முன்னதாகவே கணிக்க ரூ.10 கோடி மதிப்பில் நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆனால் அவ்வாறு வாங்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால், தற்போது பெய்துள்ள மழையின் அளவு விவரங்கள் முன்கூட்டியே தெரிந்திருக்கும். இதன் மூலம் நவீன கருவி வாங்கிய விஷயத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர்கள் ஜெய்சதீஷ், தங்க. கென்னடி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





















