காகங்களிடம் சிக்கிய ஆஸி., ஆந்தை; மீட்டு விடுவித்த வனத்துறை!
மயிலாடுதுறை அருகே காகங்களிடம் சிக்கி தவித்த அறியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலிய ஆந்தையை, சீர்காழி வனத்துறையினர் மீட்டு இரவில் பறக்க விட்டனர்.

மயிலாடுதுறை அருகே காகங்களிடம் சிக்கி தவித்த அரியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலிய ஆந்தையை, சீர்காழி வனத்துறையினர் மீட்டு பறக்க விட்டனர்.

அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் இன்றளவும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன் என்பதை அறியாது மக்களால் பேசப்படுகிறது. உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புள்ளி ஆந்தை, குகை அல்லது வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை என மூன்று வகை ஆந்தைகள் காணப்படுகிறது.
புள்ளி ஆந்தை சாலையோர மரங்கள், மாந்தோப்புகள், பாழடைந்த கட்டடங்களில் வாழும் இயல்புடையது. நகர்ப்புறம் சார்ந்தும் வாழும். தனக்கென வாழ்விட எல்லையை ஏற்படுத்திக் கொள்ளும். வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.

குகை அல்லது வெண்ணாந்தைதான் "ஆஸ்திரேலிய ஆந்தை"! குகைகள் மட்டுமல்ல, பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் காணப்படும்.
ஆந்தைகள் இரவில் நடமாடும் இரவு பறவைகள். இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். ஒரு எலி ஓர் இரவில் இரண்டு கிலோ நெல்லை வீணாக்கும் தன்மை கொண்டது. இதனால் நாட்டின் 20 சதவீத உணவு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆந்தைகள் எலி, சுண்டெலிகளைப் பிடித்து ஒரே இரவில் 3-4 எலிகளை அப்படியே விழுங்கிவிடும். வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரிவதை அறியாமல், மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.

ஆந்தைகளின் கழுத்து மிகவும் துவளக் கூடியது. மனிதர்கள், மற்ற பாலூட்டிகளின் தலைகள் இரண்டு மூட்டுகளால் கழுத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்தைகளின் தலையோ ஒரே மூட்டால் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இதன் ஒவ்வொரு கழுத்து முள்லெலும்பும் கணிசமாக இடம்பெயரக் கூடியது. இதனால் தலையை முழுமையாக 360 டிகிரி திருப்பும் திறன் கொண்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வேலாயுதம் நகரில் அறியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலியன் ஆந்தையை ஒன்றை, காகங்கள் கூட்டமாக சேர்ந்து கொத்தி விரட்டி வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காகங்களை விரட்டியடித்து சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆந்தையை மீட்டு சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவந்து இரவு பாதுகாப்பாக பறக்க விட்டனர். காகங்கள் கொத்தியதால் சிறுசிறு காயங்கள் இருந்த நிலையில், அதற்கு முதலுதவியும் அளிக்கப்பட்டது.
Before You Go
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்ஷனில் இறங்கிய POLICE
ட்ரெண்டிங் செய்திகள்






















