டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சேலத்தில் இன்று திருச்சி, திருப்பூர் அணிகள் மோதல்! திண்டுக்கல் அபார வெற்றி!
TNPL: மாலை 3.15 ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7.15 மணிக்கு மற்றொரு ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேலம்: 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன, தொடர்ந்து இரவு 7 மணிக்கு மற்றொரு லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்!
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இந்நிலையில், தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் திருச்சி அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் கலக்கல் அணி வெற்றி!
நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் பாபா அபராஜித் 'பீல்டிங்' தேர்வு செய்தார். கோவை அணிக்கு ஜிதேந்திர குமார் (42), 'இம்பாக்ட்' வீரர் சித்தார்த் (26), குரு ராகவேந்திரன் (25) கைகொடுத்தனர். கேப்டன் ஷாருக்கான் 20 ரன் எடுத்தார். கோவை அணி 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல் அவுட்டானது. சேப்பாக்கம் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 4, பிரேம் குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எளிய இலக்கைத் துரத்திய சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக் (35), மோகித் ஹரிஹரன் (21) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (7.1 ஓவர்) எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன், விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன் எடுக்க, வெற்றி எளிதானது. சேப்பாக்கம் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், பீல்டிங் தேர்வு செய்தார்.
மதுரை அணிக்கு ராம் அர்விந்த் (18), பாலசந்தர் (31) ஜோடி ஆறுதல் தந்தது. கேப்டன் சதுர்வேத் (15) ஏமாற்றினார். ஆதீக் ரஹ்மான், 41 பந்தில் 50 ரன் எடுத்தார். மதுரை அணி 20 ஓவரில் 150/8 ரன் மட்டும் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் சந்திர சேகர், பெரியசாமி தலா 2, வருண் சக்ரவர்த்தி, சந்தீப் தலா 1 விக்கெட் சாயத்தனர். பின் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு அஷ்வின் (49), ஷிவம் சிங் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஷிவம் சிங் (86) அரைசதம் அடித்தார். திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் 151/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.





















