TN weather Report: சென்னையில் கொட்டிய கனமழை.. நீரில் மூழ்கிய சாலைகள், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
TN weather Report: சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கின.

TN weather Report: சென்னையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் அதிகாலையில் கொட்டிய கனமழை:
தென்னிந்திய பகுதிகளின் மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேலும் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது. செண்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடியாமல் முழங்கால் வரை தேங்கியுள்ளது. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், காலை 7 மணி வரை மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பொழியக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு:
வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17-09-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் வரும் முதல் 19ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளடு.





















