MK Stalin: ‘’கவலைப்படாதீங்க, அப்பா நான் இருக்கேன்’’; தாய், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவிய முதல்வர்
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே, தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாமாக அழைத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரம் அருகே, தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள், இறுதிச் சடங்கிற்குக்கூட பணம் இன்றி தவித்தபோது, தாங்களாகவே முன்வந்து கிராம மக்கள் உதவி செய்து நெகிழ வைத்த நிலையில், இந்த செய்தியை படித்துவிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அந்த பிள்ளைகளுக்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கமலக்கண்ணன்(46) உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 14-ம் தேதி காலமானார். தாய் இல்லாத நிலையில், தந்தையையும் இழந்த அவரது நான்கு பிள்ளைகள், தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்தக்கூடப் பணம் இன்றி தவித்த சம்பவம், கிராம மக்களை தாங்களாகவே முன்வந்து உதவத் தூண்டியுள்ளது.
கமலக்கண்ணனுக்கு வசந்தா(40) என்ற மனைவியும், லாவண்யா(24), ரீனா(21), ரிஷிகா(17) ஆகிய மூன்று மகள்களும், அபினேஷ்(13) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் மனைவி வசந்தா, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு, கூலி வேலை செய்து வந்த கமலக்கண்ணன் தனது பிள்ளைகளை பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணனின் வருமானம் இல்லாததால், அவரது குடும்பம் பெரும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது. பொறியியல் படித்து வந்த மகள் லாவண்யா கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைத் பாதியிலேயே நிறுத்தினார். அதேபோல், 8-ம் வகுப்பு படித்து வந்த ரீனா மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்கள். மகன் அபினேஷ் மட்டும் பூட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
உதவிய கிராம மக்கள்
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது, தாய், தந்தையை இழந்த அவரது 4 குழந்தைகளும், தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் பரிதவித்தனர்.
உறவினர்களும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவர்களாலும் உதவ முடியவில்லை. இதை நேரில் கண்ட கிராம மக்கள், அந்தக் குழந்தைகளின் நிலை கண்டு கலங்கிப் போனார்கள். மனிதாபிமானத்துடன் தாங்களாகவே முன்வந்து, வீடு வீடாகச் சென்று பணம் வசூலித்து, கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியை படித்து உதவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்த செய்தியை படித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக அந்த பிள்ளைகளை தொலைபேசியில் அழைத்து பேசி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!“ என்று தெரிவித்துள்ளார்.
தான் தொலைபேசியில் அழைத்து பேசிய நிலையில், மாலையில் அமைச்சர் எ.வ. வேலு அவர்களை நேரில் சந்தித்து தேவையான நிதி உதவிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin Phone Call | ‘’கவலைப்படாத மாஅப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL | Sankarapuram | Students | APPA | DMK@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh #mkstalin #appa #dmk #sankarapuram #tnpolitics pic.twitter.com/d9R68efdTO
— ABP Nadu (@abpnadu) November 17, 2025





















