TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
தவெக மகளிர் தின விழாவில் தனது பேச்சின் இறுதியில் சங்கீதா உடனான விவாகரத்து வழக்கு பற்றி மறைமுகமாக விஜய் கருத்து தெரிவித்தார். ஆனால் விஜய் பேச்சு தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சொன்ன கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்.
விஜய்யை சுற்றும் சர்ச்சைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அவரது மனைவியான சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதுதொடர்பான மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக தெரிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருகிறேன் என சொன்ன விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை இப்படியா இருக்கிறது என பலரும் கேள்வியெழுப்பினர். அதேசமயம் அந்த நடிகை த்ரிஷா என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் த்ரிஷாவுடன் விஜய் ஜோடியாக பங்கேற்றது வதந்திகளுக்கு தீனிப்போடுவது போல அமைந்தது.
இதனிடையே சங்கீதா தாக்கல் செய்த இடைக்கால மனுவில் விஜய் தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார். இதுதொடர்பாக கேட்டால் வழக்கறிஞர் மூலமாக மிரட்டுகிறார். எனவே எனக்கு இந்தியாவில் வேறு வீடு இல்லாத காரணத்தால் விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்குமாறு தெரிவித்திருக்கிறார். எனினும் இந்த சம்பவம் குறித்து விஜய், சங்கீதா, த்ரிஷா தரப்பு என யாருமே இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்தும், சண்டை செய்து அவரது தொண்டர்கள் மிகவும் சோர்ந்து விட்டனர். உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் அவர்களும் குழம்பி வருகின்றனர்.
தவெக மகளிர் தின விழா
இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழா நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை அளித்தார். தொடர்ந்து தனது பேச்சின் இறுதியில் சங்கீதா உடனான விவாகரத்து வழக்கு பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.
அதாவது, என்னைச் சுற்றியுள்ள சமீபத்திய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் நேரத்தை செலவழிக்கும் அளவுக்கு அந்த பிரச்சினைகள் அவ்வளவு ஒர்த் இல்லை. நானே அவற்றை கவனித்துக்கொள்வேன்.எனது பிரச்சினைகள் காரணமாக நீங்கள் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
கொந்தளிக்கும் தொண்டர்கள்
ஆனால் விஜய் பேச்சு தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். நீங்கள் உங்கள் நேரத்தை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய நிகழ்வு குறித்து சிந்திக்காமல் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள் தான் என்று கூறினார். ஆனால் சங்கீதா விஷயத்தை அவர் ஒர்த் இல்லை என சொன்னதாக தவறாக பரப்பப்படுகிறது.
யாராக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, கவலைக்குரிய விஷயங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பொறுப்பாவார்கள். விஜய் அரசியல் வாழ்க்கையில் சூழ்ச்சி செய்யும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதாக மாற்றப்படுகிறது. யாருமே இன்னும் விளக்கம் கொடுக்காத நிலையில் விஜய், சங்கீதா, த்ரிஷா பற்றிய கருத்துகள் தங்களுக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















