Students Community Details : அரசுப்பள்ளி மாணவர்களிடம் சாதி குறித்து விவரம் கேட்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சாதி குறித்து கேட்கப்பட்தா என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரப் பதிவேட்டில் அவர்களின் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை வகுத்தபின் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்புடைய பள்ளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான நிதி வழங்கப்படும். 2020 -21ம் கல்வியாண்டில் பள்ளி மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் அனுப்பாத பள்ளிகளை விரைந்து அனுப்ப வேண்டுமெனக் கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில், குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா? பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களா? பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களா? அல்லது சிறுபான்மையினரா? அல்லது முற்பட்ட வகுப்பினரா? என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையின் சாதியை கேட்பதற்கும், அக்குழந்தை சார்ந்த வகுப்பை கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் என்ன வகுப்பைச் சார்ந்தவர்க் என்கிற தகவல் ஏற்கனவே இருக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில்தான் அவர் பட்டியல்/ பழங்குடியினரா? பிற்படுத்தப்பட்டவரா? முற்படுத்தப்பட்டவரா? என்பது முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது வெகுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதை மிக எளிதாக பதிவேற்றம் செய்துவிட முடியும். இதன்மூலம் பணிச்சுமை குறைகிறது. ஒரு மாணவர் பள்ளியில் சேரும்போது ஒரு முறை பதிவு செய்தால் போதும்.

இவர்கள் சார்ந்த வகுப்புதான் செயலியில் பதிவாகுமே தவிர மாணவர்களின் சாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை. விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உட்பட்ட பல்வேறு சிறப்புத்திட்டங்களுக்கான பலன்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தகவல் கேட்கப்படுகிறது. பின்னாளில் அவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பயன் பெறவும் இந்த அடிப்படைத் தகவல் தேவைப்படுகிறது.
ஒரு மாணவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான் தமிழக அரசுக்கு தேவையே தவிர அந்த மாணவரின் சாதி அல்ல. சமூக நீதியின் அடிப்படையில் இயங்கும் தமிழக அரசு தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் சாதி கேட்கப்பட்டதாக ஒரு பொய்ச் செய்தி உலவவிடுவது உண்மைக்கு புறம்பானது. சாதிக்கும் வகுப்புக்கும் வேறுபாடு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கிறது அச்செய்தி.

தமிழக பள்ளிகளில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக்கல்வித்துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தை தர முயல்வது அநீதி. முற்றிலும் பொய்யானது. தமிழக அரசின் சமூக நீதிக்கொள்கைக்கு முரணானது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
ட்ரெண்டிங் செய்திகள்






















