மூளையை தின்னும் அமீபா: சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சம்.! தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்
கொரோனா தொற்று போல மூளையை தின்னும் அமீபா நோய் பரவாது எனவும், சபரிமலைக்குச் செல்பவர்கள் எந்த ஒரு அச்சப்படவும் தேவையில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா
கேரளாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நோய் மூளையைத் தின்னும் அமீபா என்று அழைக்கப்படும் Naegleria fowleri என்ற அமீபா. இந்த நோயல் கொடிய மூளைத்தொற்றை ஏற்படுத்தி வருகிறது. மாசடைந்த நீர்நிலைகளான குளங்கள், ஆறுகள், கிணறுகள் மூலம் பரவி வருகிறது. நீரை குடிப்பதன் மூலமாக வாய் வழியாகவும், குளிப்பதன் மூலமாகமூக்கு வழியாக நீர் உள்ளே செல்லும் போது நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் தற்போது வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அமீபா பாதிப்பு அறிகுறி என்ன.?
இந்த நோயின் அறிகுறிகள் 1-9 நாட்களுக்குப் பிறகு தோன்றும். ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போல் இருக்கும், அடுத்தாக தலைவலி,வாந்தி, கழுத்து வலி ஏற்படும்.இதனையடுத்து மூளை வீக்கத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படும். இந்த நிலையில் சபரிமலைக்கு பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவிற்கு செல்லவுள்ளனர். இதனையடுத்து பம்பா ஆற்றில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் மூடவும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து பக்தர்கள் அச்சம் அடைந்திருந்த நிலையில் எந்த வித அச்சமும் கொள்ள தேவையில்லையென தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறை அறிவறுத்தல்
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏற்கெனவே ஏதேனும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களாக இருந்தால் அதற்கான மருத்துவ ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம் என தெரிவித்துள்ளது. சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும், மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும், சபரிமலை வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று போல இந்த மூளையைத் தின்னும் அமீபா நோய் பரவாது எனவே சபரிமலைக்குச் செல்பவர்கள் எந்த ஒரு அச்சப்படவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல், உடல் வலி, மயக்கம், சுவை மாற்றம், வாந்தி, பின்கழுத்துப் பகுதி இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.





















