Fact Check: பொது இடத்தில் ஆ.ராசா பெண்ணை கட்டிப்பிடித்ததாக பரவும் புகைப்படம் – உண்மை என்ன?
பொதுவெளியில் பெண் ஒருவரை திமுக எம்பி ஆ.ராசா கட்டியணைப்பதாக புகைப்படம் ஒன்று பரப்பப்படுகிறது. இது உண்மையா? இல்லையா? என தெரிந்து கொள்வோம்.

Claim: பொதுவெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பதாக பரவும் புகைப்படம்
Fact: இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா அல்ல. இத்தகவல் போலியான ஒன்று.
Fact Check: பொதுவெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பதாக பரவும் புகைப்படம் மாற்றியமைக்கப் பட்ட ஒன்று. அப்படம் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வில் எடுக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும் போதும், உண்மை பின்னணியை அறியாமல் பலரும் அதனை பகிரும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகள் சார்ந்த பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய தகவல்கள் என்றால் மிக எளிதாக பரவும் தன்மை சமூக ஊடக பயனர்களிடம் காணப்படுகிறது. இதுபோல் ஒரு வைரல் பதிவுதான் இது. திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஒரு பெண்ணை பொதுவெளியில் கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் வைரலாக பரவியுள்ளது.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் இருப்பவர் ஆ.ராசா. தற்போது நீலகிரி மக்களவை உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
திராவிட இயக்கம் தொடர்பான ஆ.ராசாவின் பேச்சுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதே சமயம் அவரது பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளன. தற்போது மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக முழங்கக் கூடிய முக்கிய நபர்களில் ஒருவராக ஆ.ராசா உள்ளார்.
இந்த நிலையில் பொது வெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, இந்த புகைப்படம் உண்மையானதா? அல்லது மாற்றப்பட்டதா? என்பதை தெலுங்கு போஸ்ட் குழு சார்பில் ஆய்வு செய்தோம். இது தொடர்பான செய்தியினை எக்ஸ் X (முன்னாள் ட்விட்டர்) தளம் மற்றும் பல சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களுடன் ஆ.ராசா அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து அதிகமாக பகிரப்பட்டதால், புகைப்படம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. இதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு விசாரணை மேற்கொண்டது.
உண்மை சரிப்பார்ப்பு: முதலில், புகைப்படத்தை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்யும் போது சில விசயங்கள் சந்தேகத்திற்குரியவையாக இருந்தன: பொதுவாக, ஆ.ராசாவின் உடை. அவர் பெரும்பாலும் சட்டை-வேட்டி அல்லது சட்டை-பேண்ட் அணிவதை வழக்கமாக கொண்டவர். ஆனால், வைரல் புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற ஜிப்பா (Jippa) அணிந்திருப்பது போல இருந்தது. புகைப்படத்தில் இருக்கும் முகம் மற்றும் உடல் அமைப்பை நுணுக்கமாக கவனித்தால், தலைமுடி பகுதி வெட்டி ஒட்டியதுபோல் காணப்பட்டது. முகத்தின் முன்பகுதி மற்றும் மூக்குப் பகுதியின் தோல்நிறத் தோற்றத்தில் வேறுபாட்டினை காண முடிந்தது. மேலும் ஆ.ராசா அவர்களின் உடல் அமைப்பு மிக ஒல்லியாக இருப்பது, இயல்பான அவரின் தோற்றத்துக்கு மாறுபட்டதாக உள்ளது. இதன் மூலம், புகைப்படம் மாற்றப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிந்தது. இக்கருத்தினை உறுதிப்படுத்துவதற்காக முதலில் நாங்கள் கூகுள் லென்ஸ் (Google Lens) மூலம் Reverse Image Search செய்தோம். இந்த தகவல் ஆய்வு நடவடிக்கையின் போது, இந்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எடுத்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், புகைப்படத்தில் உள்ளவர்கள் ஆ.ராசா அல்ல என்பதும் உறுதியாக நிரூபிக்கப்பட்டது. அசல் புகைப்படத்தில் உள்ளவர்கள் யாரென்றால் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே ஆவார்.
உண்மை புகைப்படம்:
மேலும் இச்செய்தியினை புகைப்படத்துடன் இந்தியா டுடே, நேஷனல் ஹெரால்டு மற்றும் அமர் உலாஜா போன்ற ஊடகங்கள் உண்மைச் செய்தியுடன் வெளியிட்டுள்ளன. முடிவு: சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றாகும். பொதுவெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைப்பது போல வைரலாகும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அதில் இருப்பவர் ஆதித்யா தாக்கரே என்பதுதான் உண்மை. ஆனால், ஆ.ராசா கட்டிப் பிடித்ததாக தவறான தகவல் பரவுகிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Telugu Post என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

