Professor Vipin | சாதிய பாகுபாடு காட்டிய குற்றவாளிக்கு முக்கிய பொறுப்பா? - முதல்வருக்கு முன்னாள் ஐஐடி பேராசிரியர் கடிதம்..!
பேராசிரியர் சுரேஷ்பாபுவை நீக்க வேண்டும் என்று ராஜினாமா செய்த பேராசிரியர் விபின் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம். சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாதிய பாகுபாடு காரணமாக சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றிய பேராசிரியர் விபின் பி வீட்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தொழில்துறை கொள்கையின் செயற்குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ் பாபு இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், அவரை இந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேராசிரியர் விபின் பி வீட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “சென்னை ஐ.ஐ.டி.யில் என் மீது சாதிய பாகுபாடு காட்டப்பட்டதை தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் மூலம் அறிந்திருப்பீர்கள். தற்போது இதுதொடர்பாக மூன்று நபர்கள் கொண்ட விசாரணை குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. மேலும், தேசிய ஓ.பி.சி. ஆணையமும் இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். அதற்கான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த சாதிய பாகுபாடு காட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சுரேஷ்பாபு. ஆகஸ்டு 29-ஆம் தேதி தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தொழில்துறை கொள்கையில் செயற்குழு உறுப்பினராக சுரேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இது சாதாரண பதவி அல்ல. குழுவின் உறுப்பினரான பாபு அதிகாரப்பதவியில் உள்ளவர்களுடன் நட்பு கொள்வார். இந்த விவகாரங்கள் அனைத்தும் சாதி பாகுபாடு குறித்து ஒரு நியாயமான விசாரணையைத் தொடங்க இருக்கும் எங்களுக்கு மிகவும் கடினமானது.
அதனால், நிறுவனத்தின் விசாரணை, தேசிய ஓ.பி.சி. ஆணைய விசாரணை ஆகிய விசாரணைகள் முடியும் வரை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட எந்த குழுவிலும் பாபுவை சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 2019-ஆம்ம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி நான் ஒரு புதிய பாடத்தை கற்பிக்க விண்ணப்பித்தபோது, அது எனது நடத்தையை மதிப்பிடும் நேரம். ஒரு புதிய பாடத்தை கற்பிப்பதற்கான நேரம் அல்ல என்று சாதிய பாகுபாடு காட்டுவதில் சுரேஷ் பாபு குரல் கொடுத்தார். கடந்த ஆட்சியில் கொரோனா வைரசுக்கு எதிராக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார். ஆனால், சுரேஷ் பாபு அப்போது எந்த பணியையும் செய்யவில்லை” இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சாதிய பாகுபாடு காட்டப்படுவதற்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதும், ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்துகொண்ட சில மாணவர்களின் மரணத்திற்கு இதுவே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.