AIADMK: துரோகம் செய்த சிலர்.. வேதனையாக இருப்பதாக கலங்கிய இபிஎஸ்.. இனி இதுதான் முடிவு!
அதிமுகவின் சாதாரண தொண்டன் என்ற உணர்வோடுதான் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து வருகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை ஒவ்வொரு தொண்டர்களும் அறிவார்கள் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். இத்தேர்தலின்போது 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகால அம்மா ஆட்சியின் சாதனைகளைக் கூறி மக்களைச் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கோரினோம். அதிமுக 47 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் என்று மொத்தம் 53 இடங்களில் வெற்றி பெற்றோம்.
ஆனால், வெற்றி பெற்ற ஒருசில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டு அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பெற வேண்டும் என்ற பேராசையுடன் நேற்றைக்கு நடைபெற்ற, தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறாடாவின் உத்தரவிற்கு மாறாக, ஆளும் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களது இந்தச் செயல் கழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.
அரசியலில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயல்பாகும். சில முன்னாள் அமைச்சர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்தால் 6 அமைச்சர்களும் 10 வாரியத் தலைவர் பதவிகளும் கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி தங்கள் சுயநலத்திற்காக ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவர்களின் செயல்களை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்து அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்தகையவர்கள் என்மீது பல்வேறு அவதூறு கருத்துகளை, பழி பாவங்களை சுமத்தி வருகின்றனர். நான் AC அறையில் அமர்ந்துகொண்டு அரசியல் செய்வதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி பரப்பி வருகின்றனர். தொண்டர்களை நான் நேரில் பார்ப்பதில்லை என்று உண்மைக்கு மாறாக சொல்கின்றனர். 2021-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள்.
ஆனால் தற்போது, தங்களது பதவி ஆசைக்காக கழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளவர்கள், என்னைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது மிகவும் வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமாகும். அமைச்சர் மற்றும் வாரியப் பதவிகளுக்காக சுயநலத்துடன் செயல்படும் ஒருசில முன்னாள் அமைச்சர்களிடம், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டன் என்ற உணர்வோடுதான் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து வருகிறேன். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















