MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
வெற்றி, தோல்வி என்பது திமுகவுக்கு மாறி மாறி வரும். வெற்றியைக் கண்டு நாம் வெறிக்கொண்டு அலைந்தவர்கள் இல்லை. தோல்வியைக் கண்டு துவண்டு போனவர்களும் இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவிலேயே நாம் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்துக்கு செல்பவர்கள் ஒரு லாபத்தை, வசதியை மனதில் கொண்டு ஆளும் கட்சியை நாடி அதிகமாக போவதைப் பார்த்திருப்போம். இன்றைக்கு திமுக ஆளும் கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அப்படியான திமுகவை தேடி நீங்கள் வந்திருப்பது பதவிக்காக இல்லை என்பது தெரிகிறது. அப்படி வந்திருப்பவர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
1967ம் ஆண்டு திமுக அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு கருணாநிதி தலைமையேற்றோம். 1975ம் ஆண்டு எமர்ஜென்ஸி நிலை அமல்படுத்தப்பட்டது. கருணாநிதி நெருக்கடி நிலையை எதிர்த்து எனக்கு ஆட்சி முக்கியமில்லை. ஜனநாயகம் தான் முக்கியம் என சொல்லி சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்ட காரணத்தால் 1976ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின் 13 ஆண்டுகாலம் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பின்னர் 1996,2006,2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. 2001, 2011,2026 தேர்தல்களில் தோற்றோம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெற்றி, தோல்வி என்பது திமுகவுக்கு மாறி மாறி வரும். வெற்றியைக் கண்டு நாம் வெறிக்கொண்டு அலைந்தவர்கள் இல்லை. தோல்வியைக் கண்டு துவண்டு போனவர்களும் இல்லை. இன்றைக்கு வெற்றி வாய்ப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் நாம் இழந்தாலும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த தவெக ஆட்சியே நம்முடைய தயவில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
Also Read: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
நான் வெற்றி பெற வேண்டும், திமுக ஆட்சியமைக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் தோற்க வேண்டும் என்று தான் நாம் தேர்தல் களத்தை சந்தித்தோம். நம் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆக, தவெகவுக்கு ஆதரவு கொடுக்க செல்லும்போது என்னிடம் சொல்லி விட்டு தான் சென்றார்கள். நான் அவர்களிடம் அது உங்கள் விருப்பம். உங்கள் ஜனநாயகம் என சொன்னேன்.
இதனால் குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது. அதன்மூலமாக பாஜக உள்ளே வந்து விடும் என்பதால் நான் மறுப்பேதும் சொல்லாமல் வழியனுப்பி வைத்தேன். எனவே நம்முடைய தயவில் அமைந்திருக்கும் இந்த தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவிலேயே நாம் பணியாற்ற இந்த நேரத்திலேயே உறுதியெடுத்துக் கொள்வோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















