மேகதாது விவகாரம்.. பிரதமரை ஏன் கேள்வி கேட்கல.. உதயநிதியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
இந்த திட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கும், காவேரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இந்த விஷயத்தில் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார்.
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு முன்மொழிந்தது. குறிப்பாக அணைக்கான பூமி பூஜையைத் தொடங்குவதற்கான கர்நாடகா அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.ஷிவகுமார் தெரிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில் தான் மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் திட்டத்தை நிராகரிக்குமாறு முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசின் முடிவு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நீர் தீர்ப்பாயத்தின் முடிவுக்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் இன்று காலை டெல்லி செல்லவுள்ளார். அவர் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு திமுக மற்றும் அதிமுகவை காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளப்பதிவில், “எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் இந்த பிரச்னையில் அமைதியாக இருப்பது ஏன்?. இப்போதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒரு உறுதியாக நிலைப்பாட்டை எடுத்திருக்கார். ஆனால் கனெக்டிங் காலில் பேசுற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இருவரும் அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல? பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மேகதாது அணை கட்டும் திட்டத்தை ரத்து பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் சரியாக பங்கீட்டு அளவை உறுதி பண்ணணும்.
முதலமைச்சர் விஜயின் கடிதம் மிக தெளிவாக சொல்லியிருக்கிறது. அதாவது இந்த திட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கும், காவேரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
இது அரசியல் சார்ந்த விஷயம் இல்ல. இது நம்ம தண்ணீர். நம்ம விவசாயிகள். நம்ம தமிழ்நாட்டு உரிமைகள்.
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த திட்டமும் வரக்கூடாது.முதலமைச்சர் விஜயின் கடிதத்திற்கு முழு ஆதரவளிக்கிறோம். தமிழ்நாடு மக்களின் உரிமைக்காக ஒற்றுமையாக நிற்போம்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















