"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
விஜய், அஜித்திற்கு நிகரான நடிகராக இருந்த தான் அடுத்தகட்டத்திற்கு செல்ல இயலவில்லை என்று நடிகர் விக்னேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்னேஷ். 1992ம் ஆண்டு சின்னத்தாயி என்ற படம் மூலமாக 21 வயதில் நடிகராக அறிமுகமானார். கிழக்குச் சீமையிலே படம் மூலமாக மிகவும் பிரபலமானார். விஜயகாந்த், சரத்குமார், பிரபு, பிரசாந்த் என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக நடித்தார்.
இவர் கதாநாயகனாக நடித்த பொங்கலோ பொங்கல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், தொடர்ந்து இவரால் கதாநாயனாக மிகப்பெரிய வெற்றியைப் பெற இயலவில்லை. திரைப்படங்களில் பெரியளவு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய், அஜித், விக்னேஷ்:
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, ராமன் அப்துல்லா, கிழக்குச்சீமையிலே பண்ண பிறகு கொஞ்சம் உஷார் ஆகிட்டேன். ஆச்சார்யாவில் ரொம்ப நல்லா பண்ணியிருப்பேன். ஈஷாவிலும் நல்லா பண்ணியிருப்பேன். அதற்குள் நிறைய ஹீரோக்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். விஜய், அஜித் பூம் ஆகிவிட்டார்கள். மாதவன் அப்படி, இப்படி வந்துவிட்டாங்க.
நான் வரும்போது விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு. அந்த நேரம் நல்லா இடைவெளி இருந்துச்சு. காலம் கைவிட்டு போயிடுச்சு. அதன்பின்பு, நம்மால் அதைப்பிடிக்க இயலவில்லை. பொங்கலோ பொங்கல் வெற்றிப்படம். சூரி படத்தை நடிகர் சூர்யா பார்த்துவிட்டு போன் பண்ணாரு. என்னய்யா இப்படி மிரட்டி வச்சுருக்க. அப்போது அவர் கஜினி பண்ணவே இல்லை. சூரி நல்லாவே பண்ணியிருப்பேன்.
வாய்ப்பு கேட்பேன்:
இப்போது படம் பண்ணுவது ஈஸி. ரிலீஸ் செய்வது கஷ்டம். முன்பு படம் பண்ணுவது கஷ்டம். ரிலீஸ் பண்ணுவது ஈஸி. இப்போது படம் நீங்க எடுத்திடலாம். அதை ரிலீஸ் செய்வதற்கு 3,4 மடங்கு பணம் வேணும். தங்கமா இருந்தாலும் அதற்கு விளம்பரம் தேவை.
தயாரிப்பு பண்ணக்கூடாது. பெரிய, பெரிய இயக்குனர்களைச் சந்தித்து நாம் வாய்ப்பு கேட்க வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கேன். 10 படம் ஹீரோவா பண்ணியிருக்கோம். இதற்கு பிறகு யாரிடம் சென்று வாய்ப்பு கேட்பது என்று எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. இப்போது இல்லை. நமக்கு பசிக்குது, நாம கேட்பது தவறு இல்லை.
நீங்க 56 படங்கள் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு தகுந்த மாதிரி கதாபாத்திரம் வேணும்னு சொல்லியிருக்காங்க. சிலர் தர்றேனு சொல்லியிருக்காங்க. அவர்களை பார்த்துக்கொண்டே செய்ய வேண்டும். புதுமுகம் போலவே இறங்கிவிட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னணி ஹீரோ:
விக்னேஷ் கூறியது போல 1994 காலகட்டம் வரையில் விஜய், அஜித் ஆகியோரைக் காட்டிலும் விக்னேஷ் பெரிய நடிகராகவே இருந்தார். சின்னத்தாயி, கிழக்குச்சீமையிலே என மிகப்பெரிய படங்களில் நடித்து கவனம் பெற்றிருந்தார். ஆனால், அதன்பின்பு விஜய் மற்றும் அஜித் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தனர். தற்போது முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கோரி வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















