CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கூட்டுக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

CM Stalin Delimitation: கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்க பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முதலமைச்சர்கள் சென்னை வந்துள்ளனர்.
தொகுதி மறுவரையறை - கூட்டுக்குழு கூட்டம்:
தொகுதி மறுவரையால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது. அதில் ஒருமனதாக, தொகுதி மறுவரயறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தென்மாநில முதலமைச்சர்களை இணைத்து, கூட்டுக்குழு நடவடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டார்.
சென்னையில் இன்று கூட்டுக்குழு கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. பஞ்சாப், தெலுங்கானா, கேரளா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஆலோசனைகளுக்காக சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இது வெறும் கூட்டத்தை விட அதிகம் என்று ஸ்டாலின் விவரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களுக்கான நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு இயக்கத்தின் தொடக்கமாக இது கருதப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று திரள்வதால் இந்த கூட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஸ்டாலின் எச்சரிக்கை
கூட்டம் தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இந்த கூட்டம் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். ஒன்றாக, நாம் #FairDelimitation ஐ அடைவோம். எல்லை நிர்ணயம் காரணமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தால், அது கூட்டாட்சியின் அடித்தளத்தையே தாக்கும், ஜனநாயகத்தை அரித்து, உரிமைகளை சமரசம் செய்ய வழிவகுக்கும்" என எச்சரித்து இருந்தார்.
யார் யார் பங்கேற்பு?
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே சென்னை வந்தடைந்துள்ளனர். அதேநேரம், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கூட்டத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. போலி வாக்காளர் அடையாள எண்கள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதை TMC தற்போது முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி)சார்பில் மூத்த தலைவர்களான சஞ்சய் தாஸ் பர்மா மற்றும் அமர் பட்நாயக் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருப்பதால், முதலமைச்சர் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என கருதப்படுகிறது.
பாஜக விமர்சனம்:
கூட்டுக்குழு கூட்டத்தை விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை. பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு” என சாடியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

