Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் அறிவித்துள்ளது. விவரங்களை பார்க்கலாம்.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்ப வசதியாக, நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையை பார்க்கலாம்.
கும்பகோணம் கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் குறித்து அறிக்கை
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் குறித்து, கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாகவும், எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் (நடைமேடை எண்-7), அரியலூர், ஜெயங்கொண்டம் (நடைமேடை எண்-8) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் (நடைமேடை எண்-5) ஆகிய ஊர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 450 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபோல், வரும் 10-ம் தேதி 450 கூடுதல் பேருந்துகளும், 11-ம் தேதி 100 கூடுதல் பேருந்துகளும், 12-ம் தேதி 750 கூடுதல் பேருந்துகளும், 13-ம் தேதி 850 கூடுதல் பேருந்துகளும், 14-ம் தேதி 800 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.
இதனுடன், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) 250 கூடுதல் பேருந்துகளும், 10-ம் தேதி 250 கூடுதல் பேருந்துகளும் 11-ம் தேதி 150 கூடுதல் பேருந்துகளும், 12-ம் தேதி 250 கூடுதல் பேருந்துகளும், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 575 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும், அனைத்து நகர் பேருந்துகளும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்க, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் முடிந்து திரும்ப, அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிரமங்களை தவிர்க்கும் வகையில், பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் வசதிக்காக, முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் கூறப்படுள்ளது.





















