![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
CM Stalin Letter: இலங்கை கடற்படையால் மன உளைச்சல்.. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
![CM Stalin Letter: இலங்கை கடற்படையால் மன உளைச்சல்.. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் chief minister mk stalin letter to external minister jaishankar for release tamilnadu fishermen arrest by srilanka navy CM Stalin Letter: இலங்கை கடற்படையால் மன உளைச்சல்.. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/82c8152b731776f3efb6d27e1b5121ef1688973426155102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக மீனவர்கள் கைது
"தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM- 913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் நன்கு அறிவார் என்றும், தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சாதகமான பதில் வேண்டும்:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில் தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Kalaignar Womens Assistance Scheme: மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பத்தை எங்கு, எப்படி கொடுப்பது? - நெறிமுறைகளை வெளியிட்ட அரசு
மேலும் படிக்க: "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டம் - சேலத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)